Wednesday, January 28, 2009

அண்ணன் திருமவளவனுக்கு ஈழ தமிழனின் இறுதி கடிதம்

அண்ணன் திருமவளவனுக்கு ஈழ தமிழனின் இறுதி கடிதம்      
 
விடுதலைச் சிறுத்தைகள்  கட்சித் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களே

"தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்"


ஈழ மக்களின் விடிவுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் வரை சென்ற உங்களின் அன்பும் பாசமும் அக்கறையும் ஈழ தமிழனால் என்றென்றும் வாழ் நாளில் மறக்கமுடியாதவை.

பற்று உள்ளவனுக்கு தான் பயம் வரும்,
பயம் உள்ளவனுக்கு தான் சாவு தினம் தினம்,
சாவையும் துச்சமென நினைத்து உண்ணாநிலை போராட்டத்தினை நடாத்தியமை ஈழ தமிழர் மீதான அக்கறைக்கு மேலாக கொண்ட கொள்கையின் விசுவாசத்தினையே பறை சாற்றுகின்றது. எத்தனை தடைகள் எத்தனை இடர்கள் இருந்தபோதும் ஈழ மக்கள் மீதும் ஈழ மண் மீதும் நீங்கள் காட்டிவரும் ஆழமான அன்பு எங்களுக்கு இடர் தீர்க்க எம் அண்ணன் திருமா உள்ளார் என்ற நம்பிக்கை துளியுடன் இந்த மடலை உங்களுக்கு சமர்பிக்கிறேன்.

அண்ணா !!!

முன்னூறு தமிழர்கள் மூன்றே மணி நேர இடைவெளியில் தாங்குதற்கு யாருமன்றி சென்று தூக்குதற்கு எவருமன்றி இரத்தம் சிந்தியே மாண்டுவிட்டனர்.ஆயிரத்துக்கு மேலானோர் படுகாயமடைந்து அரவணைக்க யாருமின்றி ஈழ மண்ணை குருதிகளால் அபிஷேகிக்கிறார்கள்.

அப்படியிருந்தும் இன்னும் எறிகணை பல்குழல் பீரங்கிகள் ஓய்ந்தபாடில்லை.காயப்பட்டோரை தூக்குதற்கு யாருமில்லை. ஓயாத மழையால் எம் பதுங்கு குழிகளும் நீர் நிறைந்த கிடங்குகளாய் மாறி கூவி வரும் எறிகணை மழைக்கு எமை அந்தரிக்க விட்டுவிட்டது.

காக்க யாருமற்ற ஏதிலிகளாய் இன்று உங்கள் முன் மண்டியிட்டு நிற்கின்றோம்.

காயமடைந்தவர் அனைவரும் கண்முன்னே மடிய ஓலமிட்டு அங்குமிங்கும் ஓடித் திரிகின்றோம்.

யார் வந்தார் எமை அணைக்க ?
யார் வந்தார் எமை பார்க்க?
யார் வந்தார் எமை தூக்க ?


தட்டி கேட்க கூட யாரும் வரவில்லையே?

நாம் சபிக்கப்பட்டவர்களா இல்லை சாவதற்கே பிறந்தவரா? நாமும் சக மனிதர்களாக தானே பூமியில் பிறந்தோம்?

சாவு மணி அடித்து அடித்து காதே செவிடாய் போய்விட்டது.
மரண படுக்கையில் என் இறுதி ஆசையை கேட்கிறேன் அண்ணா! சாக முன் ஒரு முறை விடிவு மணியை கேட்க வேண்டும் நான்
.

ஏன் என்று கேட்க யாருமற்று நாதியற்று தெருவோரம் பிணமாய் குவியும் ஈனத்தமிழராய் இன்று உங்கள் முன் ஓலமிடும் எங்களின் குரல்கள் கேட்கவில்லையா?

நாங்கள் நீதி கூட கேட்கவில்லை. உங்களிடம் உயிர் பிச்சை வேண்டி இரந்து பாவிகளாய் உங்கள் முன் மண்டியிட்டு நிற்கின்றோம் அண்ணா!

ஸ்ரீலங்கா அரசின் கோரமான  இன சுத்திகரிப்பில் ரத்த வெள்ளத்தில் துடிக்கும் ஈழத் தமிழனை இன்று உங்களால் மட்டுமே சாவின் விளிம்பில் இருந்து காக்க முடியும்.

கூவி அழும் எங்கள் இனத்துக்காய் ஓங்கி ஒரு குரல் கொடுக்க மாட்டீர்களா.

காலகாலத்துக்கும் உங்களுக்கு நாம் நன்றி உடையோராய் இருப்போம்.

தருணம் பிந்தினால் மரணம் என்று தமிழன் தவிக்கின்றான். இதற்கு மேலும் சற்றும் தாமதிக்காமல் ஈழ தமிழனின் சுருக்கு கயிறை இன்றே அறுத்தெறியுங்கள் அண்ணா.

எம் தமிழ் அண்ணனே செயல் வீரனே , எம் தமிழ் உணர்வாளரே எமக்காக ஒரு குரல் எமக்காக ஒரு கரம் எமக்காக ஒரு ஆணை

உங்களிடம் உரிமையுடன் உயிர் பிச்சை கேட்டு நிற்கும்,

அன்புள்ள

சாவின் மடியில் உள்ள ஈழ தமிழன்

இதனை அண்ணன் திருமவளவனுக்கு அனுப்பிவையுங்கள் thirumaa@hotmail.com
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails