Monday, January 26, 2009

வன்னிக் காடுகளில் இப்போது கொரில்லா சண்டை: இலங்கை மோதலின் தன்மை மாறுகிறது

 
   
 

altமுல்லைத் தீவு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக இலங்கை ராணுவம் கூறிக் கொள்கிறது; அதே சமயம் முல்லைத் தீவுக்கு அருகில் உள்ள காடுகளில் விடுதலைப் புலிகளுடன் கடுமையாகச் சண்டையிட்டு வருவதாகவும் தெரிவிக்கிறது.

 

இதிலிருந்து நகர்ப்புறங்களிலிருந்து விலகி வனப்பகுதிக்குச் சென்ற விடுதலைப் புலிகள் அங்கிருந்தபடியே ராணுவத்துக்குத் தங்களால் ஏற்படுத்த முடிந்த அதிகபட்ச சேதங்களை ஏற்படுத்தி வருகிறார்கள் என்று தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சண்டை தீவிரமாகி வருகிறது.

 

நாலாபுறமும் இலங்கை ராணுவத்தால் சூழப்பட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கு வெளியிலிருந்து இனி எந்த உதவியும் கிடைக்க வாய்ப்பில்லை. அவர்களும் அவர்களுடன் காடுகளில் இருக்கும் மக்களும் இப்போது ராணுவத்தின் தாக்குதலை முழு வீச்சில் எதிர்கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

 

முள்ளியவெளி என்ற இடத்தில் முன்னேற முயன்ற ராணுவத்துக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளில் சிக்கி ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். எனவே மேற்கொண்டு அப்பகுதியில் முன்னேற முடியாமல் ராணுவம் பின்தங்கிவிட்டது.

 

இதனால், கொழும்புக்குத் தகவல் தந்து விமானப் படை போர் விமானங்களையும் நவீன தாக்குதல் ஹெலிகாப்டர்களையும் வரவழைத்து, காடு என்றும் நிலம் என்றும் பாராமல் குண்டுமாரிப் பொழிய நடவடிக்கை எடுத்துள்ளனர் முல்லைத்தீவில் உள்ள ராணுவ அதிகாரிகள்.

.


சந்தேகம்:


இலங்கை ராணுவத்தினர் தெரிவிப்பதைப் போல விடுதலைப் புலிகள் நகர்ப்பகுதிகளை விட்டு வனப்பகுதிகளுக்குள் ஓடி ஒளிகின்றனரா அல்லது ராணுவ வீரர்களை வனப்பகுதிக்குள் நெடுந்தொலைவு இழுத்துச் சென்றுவிட்டு பிறகு பெருந்தாக்குதலைத் தொடுக்கப் போகிறார்களா என்ற சந்தேகம் ராணுவ மோதல்களைக் கவனித்துவரும் சர்வதேசப் பார்வையாளர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

 

நவீனப் போர் முறையின் அனைத்து அம்சங்களிலும் நிபுணர்களாக விளங்கும் விடுதலைப் புலிகளுக்கு திடீரென ஆள் பற்றாக்குறையோ, ஆயுதப் பற்றாக்குறையோ ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. புலிகள் பதுங்குவது பெரிய பாய்ச்சலுக்காகவும் இருக்கலாம் என்று பார்வையாளர்கள் நினைக்கின்றனர்.

 

பரந்தன், ஆனையிறவு, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைக் கைப்பற்றிவிட்டதாக ராணுவம் கூறினாலும் மிகப் பெரிய எண்ணிக்கையில் புலிகளுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. எனவே புலிகளின் மூலபல சேனை இன்னமும் எங்கோ தயாராக இருக்கிறது என்றே அவர்கள் கருதுகின்றனர்.

 

ராணுவம் கைப்பற்றிய இடங்களில் இருந்த கட்டடங்கள், பொது இடங்கள் எல்லாம், ""அடுத்த குடித்தனக்காரர் உடனே குடியேறுவதற்கு காலிசெய்து வைத்த வீடுகளைப் போலவே'' விடப்பட்டிருக்கின்றன. எனவேதான் அவர்களுக்கு இந்தச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

 

விசுவமடுகுளம் என்ற இடத்தில் தரைப்படைக்கு உதவ விமானப் படை எம்.ஐ.-24 ரக ஹெலிகாப்டர்கள் உதவியுடன் குண்டுமாரிப் பொழிந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் அங்கு விமானப்படையின் இடைவிடாத தாக்குதல் நடைபெறுகிறது.

 

http://www.nerudal.com/content/view/5832/1/

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails