Tuesday, January 27, 2009

வன்னியில் உள்ள 450,000 தமிழர்களையும் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானிய அரசுக்கு அவசர வேண்டுகோள்

 
   



ஸ்ரீலங்காவில் இடம்பெறும் இனப்படுகொலையை நிறுத்தி வன்னியில் உள்ள 450,000 தமிழர்களையும் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானிய அரசுக்கு அவசர வேண்டுகோள்..

வன்னியில் எழுந்திருக்கும் மனிதாபிமான பிரச்சனைகளை வெளிக்கொணருவதற்காக பிரித்தானிய தமிழ் மருத்துவ துறைசார் நிபுணர்களாகிய நாம் இன்று இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகின்றோம். இதேவேளை ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மீது நடத்தப்படும் மனவலியையும் கவலையையும் ஏற்படுத்தக் கூடியதான இனப்படுகொலை யுத்தம் தொடர்பாக பிரித்தானிய அரசினதும் எமது பிரித்தானிய பொது மக்களதும் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றோம். ஸ்ரீலங்காத் தீவில் கடந்த அறுபது வருடங்களாக அந்த நாட்டின் சம பிரஜைகளாக வாழ்வதற்கான சமத்துவ உரிமைகளும், அடிப்படை உரிமைகளும், மறுக்கப்பட்ட நிலையில் அரசியல் உரிமைகள் இன்றி தரப்படுத்தல், மற்றும் பாரபட்சமான நடத்துகைக்குட்பட்ட மக்கள் அத்தடுத்து வந்த சிங்கள அரசாங்கங்களின் மிலேச்சத்தனமான  அடக்குமுறைகளுக்கு உட்பட்டுள்ளனர். இந்தக் காலப்பகுதியில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில் மெதுவான தமிழனப் படுபொலை அரங்கேற்றப்பட்டது.


அண்மையில் தீவிரமடைந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் என கூறி 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்' என்ற போர்வையில் தமிழின அழிப்பை தீவிரமாக்கியுள்ளது. வன்னிப் பிரதேசத்தில் பாதுகாப்புப் பிரதேசம் என அறிவிக்கப்பட்ட மிகக் குறுகிய இடத்தில் செறிந்துள்ள 450,000 இற்கு மேற்பட்ட தமிழர்கள் தஞ்சமடைந்துள்ள பிரதேசத்தின் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்கள் இதனை தெளிவுபடுத்துகின்றன. இந்த பிரதேசம் 50,000 படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு பொது மக்கள் மீது கடுமையான குண்டு வீச்சுக்கள், பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள் என்பன மிகக் கடுமையாக தரையிலிருந்தும் கடலில் இருந்தும் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 72 மணி நேரத்தில் மாத்திரம் நூற்றுக்கணக்கான பொது மக்கள் இத்தகைய தாக்குதல்களினால் கொல்லப்பட்டும் பல நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தும் உள்ளனர். காயமடைந்தவர்களுக்கான அவசிய மருத்துவ சிகிச்சைகள் கூட மறுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளின் மீதும் தற்காலிக மருத்துவ முகாம்களின் மீதும் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது காஸாவில் உள்ளதை போன்று மிகக் கொடூரமானதாக இருந்த போதிலும் பிரித்தானியாவில் உள்ள எந்த தொலைக்காட்சி அலைவரிசையும் இதனை ஒளிப்பரப்பவில்லை.


கடந்த செப்பரம்பர் மாதம் 8 ஆம் திகதியில் இருந்து சர்வசே தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களுக்கான பயண அனுமதியை மறுத்த ஸ்ரீலங்கா அரசு வன்னியில் பணியாற்றிய தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களையும் வெளியேற்றியதோடு, வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லுவதற்கான தடையையும் விதித்தது. 


தற்போது போதிய உணவு, மருந்து, தங்குமிடம், எரிபொருள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அற்ற நிலை தோன்றியிருப்பதோடு மிக சிறிய எண்ணிக்கையான மருத்துவ துறைசார்ந்தவர்களே அங்குள்ள மக்களின் தேவைகளை கவனிக்க மிகக் குறைந்த வசதிகளோடு உள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசபடைகளால் மேற்கொள்ளப்படும் கண்மூடித்தனமான இராணுவ நடவடிக்கைகளினால் தற்போது அங்கு பாரிய மனிதாபிமானப் பிரச்சனைகள் தோன்றியுள்ளன. அந்த அவலக்குரல்கள் என்றுமில்லாதவாறு உரத்துக் கேட்பதோடு புலம்பெயர்ந்த தமிழர்களை கோபமும் விரக்தியும் கொள்ள வைத்திருக்கின்றது. 


இவை தொடர்பான குற்றச்சாட்டுக்களை உறுதிப்பபடுத்த எத்தகைய சர்வதேச நிறுவனங்களும் அங்கு இல்வை என்ற நிலையில் ஸ்ரீலங்கா அரசு அத்தகைய குற்றச்சாட்டுக்களை நிராகரித்து வருகின்றது. இரண்டாவதாக சர்வதேச சமூகம் மௌனமாக இருக்கும் வரை ஸ்ரீலங்கா அரசு தனது திட்டமிட்ட தமிழின படுகொலையை தொடர்ந்து மேற்கொள்ளும். 


ஆகையினால் பிரித்தானிய பிரதமரிடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.


மேலும் உயிரழிகள் இடம்பெறுவதை தடுக்க யுத்தத்தில் சம்பந்தப்பட இரண்டு தரப்பையும் உடனடி யுத்த நிறுத்தம் செய்ய அழுத்தம் கொடுக்குமாறும்,
யுத்த பிரதேசத்தல் சிக்குண்டுள்ள மக்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபையின் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும்,
பாதுகாப்புப் பிரதேசத்தை அமைத்து அங்கு ஸ்ரீலங்கா ஆயுத படைகளின் விமானங்கள் பறப்பதற்கான தடையை விதிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறும்
உடனடி மருத்துவ உதவிகளை வழங்கி மக்கள் தமது இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப உதவுமாறும் கோருகின்றோம்.

http://83.170.108.27/athirvu/

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails