Tuesday, December 30, 2008

வன்னி களமுனையில் இதுவரை 10,000 படையினர் பலி: படைத்தரப்பு வட்டாரம்

 

 

வன்னியைக் கைப்பற்றும் படை நடவடிக்கைகளில் சிறிலங்கா படைத்தரப்பில் 10,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இவை தவிர தப்பியோடிய மற்றும் காயமடைந்த படையினரின் எண்ணிக்கைகளும் ஆயிரக்கணக்கில் உள்ளன. எனவே தற்போது படை பலத்தை தக்க வைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருவதாக கொழும்பு படைத்தரப்பு வட்டார தகவல்கள்

தெரிவிக்கின்றன.
வன்னியில் கடந்த இரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் படை நடவடிக்கையில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்டு வரும் இழப்புக்கள் தொடர்பாக சிறிலங்கா படைத் தலைமையகத்தைச் சேர்ந்த விடயமறிந்த வட்டாரங்களை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
 
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வன்னி நோக்கி சிறிலங்கா படை நடவடிக்கைகளை தொடங்கியதில் இருந்து படைத்தரப்பு பாரிய ஆட்பல இழப்புக்களை சந்தித்துள்ளது. இருந்தாலும், இந்நடவடிக்கையை மிகுந்த சிரமத்துடன் அரசாங்கம் தொடர்ந்து வருகின்றது.
இக்காலப்பகுதியில் படையினர் புதிதாக எட்டு படையணிகளை உருவாக்கியுள்ளதுடன் பல களமுனைகளையும் திறந்துள்ளது.
இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் எதிர்ச் சமர்களில் படையினர் என்றுமில்லாத அளவுக்குப் பாரிய இழப்புக்களை சந்தித்து வருகின்றனர்.
வன்னியை கைப்பற்றும் படை நடவடிக்கை தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த இரண்டு வருடங்களுக்குள் இதுவரை 10,000 படையினர் உயிரிழந்துள்ளதுடன் 25,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பல ஆயிரம் பேர் உடல் அவயவங்களை இழந்துள்ளனர்.
இதே காலப்பகுதியில் 25,000-க்கும் அதிகமானோர் படைகளில் இருந்து தப்பியோடி விட்டனர் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பாக, இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் மட்டும் 11,000 பேர் வரை தப்பியோடிவிட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பெரும் நிலப் பிரதேசங்களை கைப்பற்றி வரும் படையினர் அதனை தக்க வைப்பதற்கான படை பலத் தேவையில் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
அதனை ஈடு செய்யும் முகமாக படைகளில் இளைஞர்களை சேர்க்கும் பொருட்டு தென்பகுதியில் உள்ள ஒவ்வொரு செல்லிடத் தொலைபேசிகளுக்கும் படையில் இணைந்து கொள்ளுமாறு தகவல்களை அரசாங்கம் அனுப்பி வருகின்றது.
மேலும் கிழக்கில் இருந்தும் யாழ். குடாநாட்டில் இருந்தும் வன்னி நோக்கி படையினரை நகர்த்தி வருவதுடன் சிறுவர்களையும் பெண்களையும் கூட படையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளையும் படைத்தரப்பு முடுக்கி விட்டுள்ளது.
இவை தவிர படையில் இருந்து தப்பியோடும் படையினரின் எண்ணிக்கையும் சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதனால், தப்பியோடுவோர் மீதான தண்டனைகளையும் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, தப்பியோடி மீளக் கைதாகும் படையினரை தண்டிப்பதற்கு என புதிதாக தானியங்கி தண்டனை இயந்திரங்களைக் கூட அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது.
கைதாகும் தப்பியோடிய படையினர் இந்தத் தண்டனை இயந்திரத்துடன் பிணைக்கப்பட்டு இரு நாட்கள் தொடர்ச்சியாக மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்ட பின்னர் உக்கிரமான மோதல்கள் நடைபெறும் முன்னணி களமுனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
படையில் இருந்து சிங்கள இளைஞர்கள் தப்பியோடாது இருப்பதற்கு என படைத்தரப்பு பிரத்தியேகமாக கையாண்டு வரும் ஒரு கடுமையான முறை எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails