Friday, February 20, 2009

கொழும்பில் விடுதலைப் புலிகள் வான் தாக்குதல் தொகுப்பு

கொழும்பில் விடுதலைப் புலிகள் வான் தாக்குதல் தொகுப்பு
இந்த வானூர்திகளில் ஒன்று கட்டுநாயக்க வானூர்தி நிலையப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சிறிலங்கா வான் படையினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் வானூர்திகளில் ஒன்று கொழும்பு கொம்பனித்தெரு அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீது குண்டு ஒன்றைப் போட்டுள்ளது.

இதனால் கட்டடத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதுடன், இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 47 பேர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் பகுதி ஊடாக இன்று வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணியளவில் இரண்டு வானூர்திகள் கொழும்பு நகரை நோக்கிப் பிரவேசிப்பது கற்பிட்டி பகுதியில் உள்ள கதுவீகளால் அவதானிக்கப்பட்டது.

உடனடியாகவே கொழும்பு நகரில் வானூர்தி எதிர்ப்பு பொறிமுறையைச் செயற்படுத்திய படையினர், கொழும்பு நகரில் முழுமையாக மின்சாரத் தடையை ஏற்படுத்தினர்.

அதேவேளையில், வானை நோக்கி வெளிச்சம் பாய்ச்சப்பட்ட அதேவேளையில், வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வானை நோக்கி கடுமையான துப்பாக்கிப் பிரயோகமும் செய்யப்பட்டது.

இதனால் கொழும்பு நகர் இரவு சுமார் 9:20 முதல் சுமார் ஒரு மணி நேரத்துக்குத் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களால் அதிர்ந்து கொண்டிருந்தது. இதனால் கொழும்பில் பெரும் பதற்றம் காணப்பட்டது.

இந்தவேளையில், கொழும்பு கோட்டை அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் பிரவேசித்த விடுதலைப் புலிகளின் வானூர்திகளில் ஒன்று உள்நாட்டு இறைவரித் திணைக்கள கட்டடத்தின் மீது குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

பாரிய சத்தத்துடன் இந்தக் குண்டு வெடித்த போது 13 மாடிகளைக் கொண்ட இந்த பாரிய கட்டடம் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளது. கட்டத்தின் சிதைவுகள் வீதியில் சிதறிக்கிடக்கின்றன.

உடனடியாகவே தீயணைப்புப் படையினரும், மீட்புப் பிரிவினரும் அப்பகுதிக்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்தில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகத் தெரிகின்றது.

இத்தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இரவு 11:30 நிமிடமளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் சம்பவத்தில் காயமடைந்த 47 பேர் இதுவரையில் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்கா வான் படையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்து முன்பாகவே வான் படையின் தலைமையகம் அமைந்திருக்கின்றது.

வான் படை தலைமை அலுவலகத்தை இலக்கு வைத்தே விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் இலக்குத் தவறி அதற்கு முன்பாகவுள்ள உள்நாட்டு இறைவரி திணைக்கள கட்டடத்தின் மீது குண்டு வீழ்ந்திருக்கலாம் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்துள்ள இலங்கை வங்கி கட்டடம் உட்பட பல கட்டடங்களும் சேதமடைந்திருக்கின்றன.

சம்பவத்தையடுத்து பாதையை மூடித் தடை விதித்துள்ள படையினர் இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கியிருக்கலாம் என்பதால் தேடுதலை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளையில், கட்டுநாயக்க வானூர்தி நிலையப் பகுதியில் தாக்குதலை நடத்திய விடுதலைப் புலிகளின் மற்றைய வானூர்தி வான் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

வானூர்தி நிலைய பகுதியில் இருந்து புலிகளின் வானூர்தியின் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் வானோடியின் உடலமும் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதல் தொடர்பில் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல முன்னுக்குப் பின் முரணான தகவல்களையே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் இத்தாக்குதல் குறித்து சுயாதீனமான தகவல்கள் எதனையும் பெறமுடியவில்லை.

இதேவேளையில், புலிகளின் இரண்டாவது வானூர்தி புத்தளம் ஆராச்சிகட்டுவ பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக புத்தளம் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர் என்று அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

புலிகளின் இந்த வானூர்தி தாக்குதலில் ஏற்பட்ட உண்மையான சேத விபரங்கள் அல்லது எவ்வாறான தாக்குதல் இடம்பெற்றது என்பது பற்றிய சுயாதீனமான தகவல் எதனையும் பெற முடியாத வகையில் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் ஊடகங்களுக்கு மறைமுகமான தடை உத்தரவு ஒன்றை இன்றிரவு பிறப்பித்திருந்தது.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails