Wednesday, February 18, 2009

இந்திய ஊடகங்களின் ஓர வஞ்சனை...ஒரு தமிழ் நாளேடு கூட படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதேயில்லை.

 
 
இலங்கை வன்னியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பிஞ்சுக்குழந்தைகளும், தாய்மார்களூம் வித விதமான இரசாயன குண்டுகள் வீசப்பட்டு கொல்லப்படுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு தமிழ் நாளேடு கூட இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதேயில்லை.
காஸாவில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப்பட்ட போது பலி எண்ணிக்கை 1000ஐ தொட்டு விட்டது, 1100 ஆகி விட்டது, 1300ஐ தொட்டு விட்டது என்று தினமும் முதல் பக்கத்தில் வெளியிட்டார்கள்.
கடந்த இரு மாதங்களில் வன்னியில் மட்டும் 2000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலானோருக்கு இந்த விபரங்கள் தெரியவருவதில்லை.
இலங்கை இராணுவம் வெளியிடும் செய்திகளை போட்டி போட்டுக் கொண்டு வெளியிடுகிறார்கள். தற்கொலை குண்டு தாக்குதல் என்றால் முதல் பக்கத்தில் வெளியிட்டு பெரிய தர்க்கமே நடக்கிறது. ஏன் பொதுமக்கள் பலி எண்ணிக்கையையும் வெளியிட வேண்டியதுதானே?
ஜூனியர் விகடன், நக்கீரன் போன்ற‌ வார இதழ்கள் பெரும் பங்களிப்பை செய்தாலும் அவற்றை குறைந்தளவு பேர்தான் படிக்கின்றனர்.
நாளேடுகளின் நிலை இப்படி என்றால் தொலைக்காட்சிகளிலோ அதுவும் இல்லை. மக்கள் தொலைக்காட்சி தவிர மற்றவற்றில் எதுவுமே சொல்வதில்லை.
தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த 8 பேரின் கானொளியை மட்டும் திரும்ப திரும்ப போட்டுக் காண்பித்தார்கள். CNN-IBN, TIMES NOW போன்ற தொலைக்காட்சிகலோ இன்னமும் மும்பை தாக்குதலை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
மங்களூர் பாரில் இளம்பெண்கள் ராம் சேனா அமைப்பினரால் தாக்கப்பட்டதில் பெண்ணுரிமை பறிபோய் விட்டதாக கூப்பாடு போடுபவர்களுக்கு கைக்கெட்டும் தூரத்தில் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு வீடியோ எடுப்பது தெரியாமல் போய்விட்டதா? அல்லது தமிழன் என்பதால் இளக்காரமாய் போய் விட்டதா?
தமிழ் இணையதளங்களில் வெளிவருகிற செய்திகளை பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்கிறவர்களுக்குத்தான் உண்மை நிலவரம் தெரிகின்றது. அவர்களில் ஒரு சிலர் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். மற்ற தமிழ்நாட்டு பொதுமக்களுக்கோ உண்மையில் இலங்கையில் என்னதான் நடக்கிறது என்பதே தெரியாமல் உள்ளது.
தமிழக தொலைக்காட்சிகளும், நாளேடுகளும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக இருப்பதால் உண்மைச் செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கிறார்கள்.
கிடைக்கின்ற‌ ஒரு சில செய்திகளை மட்டும் வைத்தே தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. உண்மை நெருப்பை வெகு காலம் மறைக்க முடியாது. உண்மை ஒரு நாள் வெளி வந்தே தீரும்.
ஒட்டு மொத்த உலகமே தமிழினத்திற்கு எதிராக துரோகம் செய்யும் போது ஊடகங்களின் இந்த துரோகத்தையும் தாங்குவதற்குறிய மன வலிமையை நமக்கு இறைவன் தான் தர வேண்டும்.

 

http://www.tamilwin.com/view.php?2aIWnTe0dPj060ecGG7h3b4P9EO4d2g2h2cc2DpY3d436QV3b02ZLu3e

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails