Wednesday, June 24, 2009

2 மாத குழந்தை மீது வரதட்சணை வழக்கு

 

மும்பை : பெரியம்மா கொடுத்த வரதட்சணை புகாரின் அடிப்படையில் 2 மாத கைக்குழந்தையின் பெயரையும் முதல் தகவல் அறிக்கையில் போலீசார் சேர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மும்பையைச் சேர்ந்தவர் சம்சுதீன் கான். இவர், தனது மனைவி ஷகிலாவை 2 ஆண்டுக்கு முன் விவகாரத்து செய்தார்.பின்னர், ரேஷ்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ரேஷ்மாவுக்கு 2 மாதத்துக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. 
 
 
   குழந்தைக்கு ஜோயா என்று பெயர் சூட்டினர். இந்நிலையில் சம்சுதீன் குடும்பத்தினர் ரூ.1 லட்சம் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமை படுத்தியதாக ஷகிலா போலீசில் புகார் செய்தார். 2 ஆண்டுக்கு முன்பே விவாகரத்து பெற்ற போதும், அந்த புகாரில் தன்னை கொடுமைப் படுத்துபவர்கள் பட்டியலில் ரேஷ்மா மற்றும் 2 மாத கைக்குழந்தை ஜோயாவின் பெயரையும் ஷகிலா குறிப்பிட்டிருந்தார். சம்சுதீன் கான், ரேஷ்மா, ஜோயாவை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். மதியம் 1 மணிக்கு போலீஸ் நிலையம் வந்தவர்களை இரவு 10 மணிக்குதான் திருப்பி அனுப்பினர். வேறு வழியின்றி, போலீசார் முன்னிலையில்தான் குழந்தைக்கு தாய்பால் கொடுத்ததாக ரேஷ்மா கூறினார். முதல் தகவல் அறிக்கையில், குற்றவாளிகளாக குழந்தை ஜோயா உட்பட 8 பேரின் பெயரையும் போலீசார் சேர்த்தனர். 2 மாத கைக்குழந்தையின் பெயரை சேர்க்காதீர்கள் என்று போலீசிடம் ரேஷ்மா கெஞ்சினார். ஆனால்,   குழந்தையின் பெயரை வழக்கில் சேர்ப்பது முதல் முறை அல்ல என்று போலீசார் கூறிவிட்டனர். 
 

  ஜோயா உட்பட 8 பேர் சார்பில் முன்ஜாமீன் கேட்டு செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த செசன்ஸ் நீதிபதி சர்தேசாய் குழந்தை ஜோயா உட்பட 7 பேருக்கு முன்ஜாமீன் வழங்கினார். சம்சுதீன் மனுவை மட்டும் தள்ளுபடி செய்தார். பெரியம்மாவின் புகாரின்பேரில் 2 மாத கைக்குழந்தை மீது வரதட்சணை கொடுமை வழக்கு போட்ட போலீசுக்கும், குழந்தைக்கு முன்ஜாமீன் கொடுக்கப்பட்டதற்கும் சட்ட நிபுணர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து சட்டநிபுணர் ராம் ஜெத்மலானி கூறுகையில், ÔÔ2 மாத குழந்தை மீது வழக்கா? இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை. புகார் கொடுத்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும்Õ என்றார்.மும்பை முன்னாள் மேயரும் வக்கீலுமான நிர்மலா சவந்த் கூறுகையில், ÔÔ7 வயது வரை ஒரு குழந்தையை அப்பாவியாகவே சட்டம் கருதுகிறது. ஏனென்றால், எது சரி, எது தவறு என்று அந்த குழந்தைக்கு அதுவரை தெரியாது. 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை இளம்சிறார் சட்டப்படி விசாரிக்க வேண்டும். இந்த நிலையில் 2 மாத கைக்குழந்தை மீது வழக்கு போட்டது விந்தையாக இருக்கிறது. அந்த குழந்தைக்காக முன்ஜாமீன் கேட்டிருக்கவே வேண்டாம். நீதிமன்ற வரலாற்றில் சிறு குழந்தைக்கு எந்த நீதிபதியும் முன்ஜாமீன் கொடுத்தது இல்லை. குழந்தை ஜோயாவுக்கு முன்ஜாமீன் வழங்கியது சட்டத்தை கேலிக் கூத்தாக்கிவிட்டதுÕÕ என்றார்.
 

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails