Tuesday, October 14, 2008

நக்சலைட்களை ஒடுக்க "கோப்ரா"தனிப்படை

 
 
lankasri.comநக்சலைட்களை ஒடுக்குவதற்காக, "கோப்ரா"( நல்லபாம்பு) என்ற பெயரில் தனிப்படை அமைக்கப்பட உள்ளது. இந்தப் படையிலிருந்து சிலரை தேர்வு செய்து,அதன்மூலம் தனி உளவுப் பிரிவை உருவாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தனிப்படையில் மொத்தம் 10ஆயிரம் பேர் இருப்பர்.

நாடு முழுவதும் நக்சலைட்களின் ஆதிக்கம் பெருகி வருகிறது. சில மாநிலங்களில் இவர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதால், அங்கு அதிக அளவில் வன்முறைகள் நடந்து வருகின்றன. இதனால், நக்சலைட்களை ஒடுக்குவதற்காக, "கோப்ரா"என்ற பெயரில் தனிப்படை ஒன்றை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தனி உளவுப் பிரிவைக் கொண்டிருக்கும்: ஒரு பட்டாலியனுக்கு 1,000 பேர் என்ற அடிப்படையில்,10 பட்டாலியன்களை (10 ஆயிரம் பேர்) இந்தப் படை கொண்டிருக்கும். இந்த 10 பட்டாலியன்களில், ஒரு பட்டாலியனுக்கு மூன்று பேர் என்ற வீதத்தில்,30 பேர் தேர்வு செய்யப்படுவர்.அவர்கள் தனி உளவுப் பிரிவாக செயல்படுவர்.நக்சலைட் தொடர்பான விஷயங்களை,இந்த உளவுப் பிரிவினர் கண்காணிப்பதோடு, அவர்களின் நடமாட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் தகவல்கள் சேகரித்து மத்திய அரசுக்கு அனுப்புவர்."நக்சலைட்கள் அல்லது பயங்கரவாதிகளை எதிர்கொள்ள வேண்டும் எனில்,உளவுப் பிரிவு இருக்க வேண்டியது அவசியம். அந்த அடிப்படையில், இந்த தனிப் படையும் தனி உளவுப் பிரிவைக் கொண்டிருக்கும்."அவர்கள், நக்சலைட்கள் தொடர்பான தகவல்களைச் சேகரிப்பது, அவர்களின் சதி திட்டங்களை அறிந்து கொள்வது, கிராமத்தவர்களுடனும், மற்றவர்களுடனும் தொடர்பு வைத்து,நக்சலைட்களின் நடமாட்டத்தை அறிந்து நிர்வாகத்தினருக்குத் தகவல் தெரிவிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர்"என,மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.அவர் மேலும் கூறியதாவது:

10 பட்டாலியன்:இந்த "கோப்ரா"படை மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கட்டுப்பாட்டில் செயல்படும். அதன் உளவுப் பிரிவு,உதவி கமாண்டன்டின் கீழ் செயல்படும்.இந்தத் தனிப்படைக்கான,10 பட்டாலியன்களில் இரண்டு பட்டாலியன்கள்,மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து இந்த நிதியாண்டில் உருவாக்கப்படும். அந்தப் படையினர் சட்டீஸ்கர் மாநிலத்தில் பணியில் ஈடுபடுவர்.அடுத்த நிதியாண்டில்,மேலும் நான்கு பட்டாலியன்களும்,அதன்பின் மேலும் நான்கு பட்டாலியன்களும் உருவாக்கப்படும்.மொத்தம் மூன்று ஆண்டுகளில் 10பட்டாலியன் படையினரும் உருவாக்கப்படுவர்.

ஒப்புதல் வழங்காமல்:ஜம்மு-காஷ்மீர் உட்பட பல மாநிலங்களில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நக்சலைட் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர்,தங்களின் படைக்கு என,தனி உளவுப் பிரிவை அமைக்க திட்டமிட்டு,அது தொடர் பான முன்மொழிவுகளை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளனர்.ஆனால்,அந்த முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல், மத்திய உள்துறை அமைச்சகம் காலம் தாழ்த்தி வருகிறது.நக்சலைட்களை ஒடுக்குவதற்காக, "கோப்ரா"படையை உருவாக்கும் யோசனைக்கும் கடந்த ஆகஸ்டில் தான் மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தது."இடதுசாரி பயங்கரவாதம் நாட்டை பீடித்துள்ள ஒரு வைரஸ்"என, பிரதமர் விமர்சித்திருந்தும் கூட, பல மாதங்களுக்குப் பிறகே, இப்படை அமைக்க அனுமதி கிடைத்தது.இவ்வாறு மத்திய ரிசர்வ் போலீஸ் படை உயர் அதிகாரி கூறினார். நக்சலைட் அமைப்பில் தற்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுதவிர 1.50 லட்சம் பேர் அவர்களுக்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் ஆதரவு தருகின்றனர்.கடந்த ஆண்டு அக்டோபரில், போலீஸ் அதிகாரிகள் மத்தியில் உரை நிகழ்த்திய பிரதமர் மன்மோகன் சிங், "நக்சலைட்களை ஒடுக்க தனிப்படை அமைக்கப்படும்"என்றார். இந்தப்படை மொத்தம் 1,390 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1223892116&archive=&start_from=&ucat=1&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails