Sunday, October 12, 2008

தசரா ஊர்வல மோதல் எதிரொலி 2 குழந்தைகள் உள்பட 6 பேர் எரித்துக்கொலை ஆந்திராவில் பதற்றம்



அடிலாபாத், அக்.13-

ஆந்திர மாநிலத்தில் தசரா ஊர்வல மோதலை தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது. இதில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டனர்.

ஊரடங்கு உத்தரவு

ஆந்திர மாநிலம், அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள பைய்ன்சா நகரில் கடந்த 10-ந்தேதி அன்று தசரா விழா ஊர்வலம் நடைபெற்றது. ஒரு வழிபாட்டு தலம் அருகே ஊர்வலம் சென்றபோது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். வன்முறையை கட்டுப்படுத்த முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரும் இந்த சம்பவத்தில் காயம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து பைன்சா நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

6 பேர் எரித்துக்கொலை

இந்த மோதல் எதிரொலியாக, அடிலாபாத் மாவட்டம் ஒட்டோலி பகுதியில் நேற்று இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். கலவரம் நடைபெற்ற நிர்மல் மற்றும் ஆசிபாபாத் ஆகிய இடங்களில் நிலைமை தற்போது கட்டுக்கு அடங்கி இருந்தாலும் பைன்சா நகரில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருகிறது.

அங்கு நிலைமை சீரானதும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்று, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் நிருபர்களிடம் தெரிவித்தார். கலவரம் நடைபெற்ற இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. மாவட்ட தலைநகரில் இருந்து கூடுதல் போலீஸ் படை வரவழைக்கப்பட்டு உள்ளது.

சி.பி.ஐ. விசாரணை

6 பேர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது. நேற்று சம்பவ இடத்தை பார்வையிட்ட ஆந்திர உள்துறை மந்திரி ஜனா ரெட்டி இந்த தகவலை தெரிவித்தார்.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=444026&disdate=10/13/2008

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails