Tuesday, October 14, 2008

கிறிஸ்தவர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வாபஸ்!:பிஷப்புகள் கோரிக்கையை ஏற்றது அரசு

 
 
lankasri.comகிறிஸ்தவர்களுக்கான 3.5சதவீத இட ஒதுக்கீடு உத்தரவை வாபஸ் பெறுவதாகவும்,இஸ்லாமியர்களுக்கு மட்டும் 3.5சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான 30சதவீத இட ஒதுக்கீட்டில் கிறிஸ்தவர்களுக்கு 3.5சதவீதமும்,முஸ்லிம்களுக்கு 3.5சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.இதில், வேலைவாய்ப்பில் குறிப்பாக ஆசிரியர் நியமனத்தில் கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவர்களுக்கு அதிகளவு இடம் கிடைக்காமல் போனதாக அப்பகுதியினர் அதிருப்தி தெரிவித்தனர்.இது தொடர்பாக முதல்வரிடம் கிறிஸ்தவப் பிரதிநிதிகள் முறையிட்டனர்.

மயிலை பேராயர் சின்னப்பா:இதுகுறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஜனார்த்தனம் தலைமையிலான கமிட்டிக்கு முதல்வர் பரிந்துரைத்திருந்தார்.சிறுபான்மை சமூக பிரதிநிதிகளுடன் முதல்வர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.முதல்வர் கருணாநிதியை நேற்று தலைமைச் செயலகத்தில் சென்னை மயிலை பேராயர் சின்னப்பா,சி.எஸ்.ஐ.,பேராயர் தேவகடாட்சம்,காங்கிரஸ் சட்டசபை கொறடா பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

கிறிஸ்தவர்களுக்கும்,முஸ்லிம்களுக்கும் தலா 3.5சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்த போது உயர்க்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் அனுமதியிலும்,வேலைவாய்ப்பிலும் கிறிஸ்தவர்கள் முன் பெற்ற வாய்ப்புகளை விட மிகக் குறைவாகவே பெற முடிந்துள்ளது.எனவே,கிறிஸ்தவர்களுக்கான 3.5சதவீத இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற்று,முன்பிருந்தபடியே இட ஒதுக்கீட்டை தொடர வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிறிஸ்தவர்களின் இந்த கோரிக்கையைப் பரிசீலித்த பின் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பு:

பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும்,முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க நல்லெண்ணத்துடன் கோரிக்கை வைக்கப்பட்டது.அரசு தனி இட ஒதுக்கீட்டுக்கான அவசரச் சட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி கொண்டு வந்தது.இதில்,கிறிஸ்தவர்களுக்கு கல்வி,வேலைவாய்ப்புத் துறைகளில் உரிய இடம் கிடைக்காமல் பின்னடைவு ஏற்படக் கூடும் என்ற ஐயப்பாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

பழைய படியே இட ஒதுக்கீடு:கல்வி, வேலைவாய்ப்புகளில் பின்னடைந்துள்ள முஸ்லிம்களுக்கு இந்த தனி இட ஒதுக்கீடு மூலம் கிடைக்கிற ஆதாயத்தை அவர்கள் வரவேற்கின்றனர்.ஆனால்,கிறிஸ்தவர்களுக்கு இந்த தனி இட ஒதுக்கீடு முன்பிருந்த வாய்ப்புகளைக் குறைத்துள்ளது.எனவே,பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பழைய படியே இட ஒதுக்கீடு தொடர,அவர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை திரும்பப் பெறுவது என்றும்,சட்டத்தில் தக்க திருத்தம் மேற்கொள்வது என்றும் அரசு முடிவெடுத்துள்ளது.

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் கல்வி,வேலைவாய்ப்புகளில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டிய சூழ்நிலையைக் கருதி,அவர்களுக்கு மட்டும் இந்த தனி இட ஒதுக்கீடு ஆணையை நடமுறைப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.இவ்வாறு முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

 

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1224000498&archive=&start_from=&ucat=1&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails