Sunday, May 31, 2009

"அசத்தப்போவது யாரு" புகழ் டிவி நடிகர் விபத்தில் மரணம்

 
 


காங்கயம், மே.31-

கார் மீது லாரி மோதிய விபத்தில் டி.வி. நடிகர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

டி.வி. நடிகர்

கோவை ஒப்பணக்காரவீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் ரமேஷ்குமார் (வயது 40). `மிமிக்ரி' கலைஞரான இவர் கோவை ரமேஷ் என்ற பெயரில் டி.வி.யில் `அசத்தப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியில் நடித்து வந்தார். கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த மாரப்பன் என்பவரின் மகன் கார்த்திகேயன் என்ற மோகன்குமார் (30). இவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவர்கள் இருவரும் திருவாரூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்து விட்டு ரமேஷ்குமார், கார்த்திகேயன், அசோக் ஆகியோர் காரில் கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.


விபத்தில் பலி

திருச்சி வந்ததும் காரில் இருந்து அசோக் இறங்கி விட்டார். பின்னர் ரமேஷ்குமார், கார்த்திகேயன் இருவரும் கோவை நோக்கி வந்தனர். நேற்று காலை 6 மணி அளவில் அவர்கள் காங்கயம்-முத்தூர் பிரிவு அருகே வந்து கொண்டு இருந்தனர். காரை கார்த்திகேயன் ஓட்டி வந்தார். அப்போது எதிரே வந்த லாரி, திடீரென்று கார் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த கோவை ரமேஷ், கார்த்திகேயன் இருவரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

லாரி டிரைவர் கைது

இது குறித்து தகவல் கிடைத்ததும் காங்கயம் போலீசாரும், காங்கயம் தீயணைப்பு நிலைய அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், காரின் இடிபாடுகளில் சிக்கி இறந்த கோவை ரமேஷ் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரது உடல்களை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் முருகசாமி (வயது33) என்பவரை கைது செய்தனர். இவர் கோவை மதுக்கரை போடிபாளையத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails