Sunday, May 24, 2009

இருக்கிறார் பிரபாகரன்:அடித்துச்சொல்கிறார் வைகோ

 

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையில் நடந்த கடும் மோதலில் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று ராணுவத்தினர் அறிவித்தனர்.

பிரபாகரன் உடல் கண்டெடுக்கப்பட்டது என்று உறுதிப்படுத்தினர்.  ஆனால்,  ராணுவம் காட்டிய உடல் மீது பல கேள்விகள் எழுந்தன.   அது பிரபாகரன் உடல்தானா என்று சந்தேகங்கள் எழந்தன.

இதற்கிடையில் பிரபாகரன் போரில் தப்பிச்சென்று பாதுகாப்பாக நலமுடன் இருப்பதாக புலிகள் தரப்பு அறிவித்தது.

விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில்,   ''தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று இலங்கை அரசாங்கமும் அதன்  ராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரச்சாரத்தினை நம்பவேண்டாம்.  தமிழீழ தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார்'' என்று உறுதிப்படுத்தினார்.

அவர் மேலும்,  ''எமது பாசத்துக்குரிய தேசியத் தலைவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணத்தில் தொடர்பு கொள்வார்'' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று,  விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் செல்வராசா பதமநாதன்,   ''தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த 17 ஆம் தேதி இராணுவத்துடன் நடைபெற்ற நேரடி மோதலின் போது அமரராகிவிட்டார்.

அவருக்கு தமிழர்கள் யாவரும் ஒரு வாரம் துக்கம் அனுசரிப்போம்'' என்று அறிவித்துள்ளார்.

அவர் மேலும்,  ''தொடர்ந்து ஜனநாயக வழியில் நாங்கள் போராடுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.

செல்வராசா பத்மநாதனின் இந்த அறிவிப்பை, மதிமுக பொதுச்செயலாளரும், இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் முக்கியஸ்தருமான வைகோ ஆணித்தரமாக மறுத்துள்ளார்.

''பத்மநாபனின் அறிவிப்பு துரோகச்செயல் ஆகும்.  பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்'' என்று அறிவித்துள்ளார்.


வைகோவின் அறிக்கை முழு விபரம்:

பத்மநாபனின் அறிவிப்பு துரோகச்செயல் ஆகும்; பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்!


தமிழ் தேசியத்தலைவரும் உலகத்தமிழர்களின் இதயநாயகனுமான பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார்.  அதில் எள் அளவும் எனக்குச் சந்தேகம் இல்லை.

உரிய காலத்தில் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க வருவார்.

யுத்த களத்தில் இருந்து வேனில் அவர் தப்பி ஓடும் போது சுட்டுக்கொல்லப்பட்டார் என்று ஒரு பொய்ச்செய்தியை சிங்கள அரசு முதலில் வெளியிட்டது.  இரண்டு நாட்கள் கழித்து, நந்திக்கடல் பகுதியில் அவர் உடல் கண்டு எடுக்கப்பட்டதாக இன்னொரு பொய்யைச்சொன்னது.

மே 19 ம்நாள் அன்று 'இதுதான் பிரபாகரனின் உயிர் அற்ற சடலம் என்று முதலில் காட்டப்பட்ட அந்த உடலில் முகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்கள் பளிச்சிட்டன.


முகம், நன்கு மழிக்கப்பட்டு இருந்தது. அவருடைய உடல் பருமனுக்கு சற்றும் பொருத்தம் இல்லாத உடல் அமைப்பு என்பதால் இது அக்கிரமமான பொய் என்பதை அறிந்து கொண்டோம்.

சில மணி நேரங்களில் வேறு ஒரு சடலத்தை சிங்கள ராணுவம் காட்டியது.  இதில் வலது கண் மூடியும், இடது கண் இலேசாக திறந்தும் இருந்தது.  முன் நெற்றியில் இருந்த காயத்தை துணி போட்டு மறைத்து இருந்தனர்.

பகைவர்கள் சுட்டு இருந்தால் உடலில் ஏராளமான குண்டுகள் பாய்ந்து இருக்க வேண்டும்.  அவரே ஒருவேளை தன்னைச் சுட்டுக்கொண்டாரா என்பதையும் ஏற்பதற்கு இல்லை.

தன்னைத்தானே மாய்த்துக்கொள்ள முடிவு எடுத்தால் வலது காதை ஒட்டினாற்போல் கன்னப்பொருத்தில் தான் ரவையைச் செலுத்த வேண்டும் என்று அவரே போராளிகளுக்கு பயிற்சி அளித்தவர் ஆவார்.

மேலும்,  இரண்டாவதாக காட்டப்பட்ட உடலும் முகத்தோற்றம் இது சிங்கள ராணுவத்தின் செப்பிடுவித்தை ஏமாற்று வேலை என்பதை எடுத்துக்காட்டியது.

அவரது சடலம் கிடைத்தது என்றால் அவரது குடும்பத்தினர், மெய்க்காப்பாளர்கள் சடலங்கள் எங்கே? என்ற கேள்விக்கு சிங்கள் ராணுவத்தின் பதில் ஏற்கத்தக்கதாக இல்லை.


பிரபாகரனின் சடலம்தான் என்பதை மரபு அணு சோதனையால் மெய்ப்பிக்க வேண்டியது சிங்கள அரசின் கடைமை ஆகும்.  பிரபாகரனின் தந்தையார் உயிருடன் இருக்கிறார்.  எனவே, அவருடைய உடம்பில்  இருந்து சோதனைக்குத் தேவையனவற்றை எடுத்து டி.என்.ஏ. சோதனை நடத்தி, சந்தேகத்திற்கு இடம் இன்றி இறந்தது பிரபாகரன் தான் என்று உலக நாடுகளுக்கு சிஙகள் அரசு ஏன் அறிவிக்கவில்லை?

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails