Wednesday, February 3, 2010

நாம் ஒன்றிணையும் போது எம்மை எதிர்ப்பதற்கு இந்த உலகம் துணியப்போவதில்லை


வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நேற்று முன்தினமும் (30) நேற்றும் (31) பிரித்தானியாவில் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.

சிறீலங்காவின் தென்னிலங்கை அரசியலில் தம்மால் முடிந்த காத்திரமான செய்தி ஒன்றை தாயகத்து மக்கள் கூறிச்செல்ல, இங்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத்து தமிழ் மக்கள் தமது ஜனநாயகப் பாதைக்கான அங்கீகாரத்தை பெற்று வருகின்றனர்.

நோர்வே, பிரான்ஸ், கனடா, ஜேர்மனி, நெதர்லாந்து, சுவிற்சலாந்து, பிரித்தானியா என வடஅமெரிக்கா கண்டத்தில் இருந்து ஐரோப்பாவின் இதயம் வரையிலும் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காக வழங்கிவரும் ஆணைகள் சிறீலங்காவை தற்போது மெல்ல மெல்ல உலுக்க ஆரம்பித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) கொழும்பில் இருந்து வெளிவந்த லக்பிம வாரஏடு சிறீலங்காவில் நடைபெற்ற அரச தலைவர் தேர்தல் தொடர்பான பரபரப்பான செய்திகளுக்கு மத்தியிலும் ஐரோப்பாவின் இதயத்தில் நடந்து முடிந்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான கருத்துக்கணிப்பு தொடர்பில் ஒரு கட்டுரையை வரைந்துள்ளது (AAAH! BUT YOU MISSED THE OTHER POLL).

சிறீலங்காவில் நடைபெற்ற அரச தலைவருக்கான தேர்தலில் இரு பெரும் தலைகள் மோதியதால் புலம்பெயர் தமிழ் மக்களின் இந்த வாக்களிப்புக்கள் சிங்கள மக்களுக்கு எட்டவில்லை என்றும், ஜேர்மனி, சுவிற்சலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தமிழீழ கோரிக்கைக்கு "ஆம்" என நம்பமுடியாத எண்ணிக்கையில் வாக்களித்துள்ளதாகவும் அந்த கட்டுரை நீண்டு செல்கின்றது.

இந்த வாக்கெடுப்பின் ஊடாக தமிழ் மக்கள் இரு வழிகளில் தம்மை வலுப்படுத்தி வருவதாக சிங்கள பெரும்பான்மையினம் தற்போது அச்சமடைந்துள்ளது. ஒன்று தமது அரசியல் உரிமைகளை அவர்கள் அனைத்துலகத்தின் முன் குறிப்பாக மேற்குலகத்திடம் ஜனநாயக வழிகளில் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கின்றனர்.

இரண்டாவது அரசியல் வழிகளில் மிகவும் முதிர்ச்சி மிக்க சமூகமாக அது மாற்றம் பெற்று வருகின்றது. சலுகைகளும், மிரட்டல்களும், அடக்குமுறைகளும் அந்த மக்களிடம் எந்தவிதமான பாதிப்புக்களையும் கொண்டுவராது என்பது அதன் பொருள். அதனை அண்மையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற சிறீலங்காவுக்கான அரச தலைவருக்கான தேர்தலிலும் நாம் கண்டுகொண்டோம்.

உத்தியோகபூர்வ கணிப்புக்களின் படி ஏறத்தாள ஒரு இலட்சம் மக்களை தொகையை கொண்ட பிரித்தானியாவில் 64,692 தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டதுடன், 99.33 வீதமாவர்கள் தனித்தமிழீழமே தமது அரசியல் உரிமைக்கான இறுதித் தீர்வு எனவும தெரிவித்துள்ளனர்.

இது ஒரு வரலாற்று திருப்பமாகும். இதுவரை நடைபெற்ற ஏழு வாக்களிப்புக்களில் அதிக எண்ணிக்கையான மக்களை உள்வாங்கி கொண்ட வாக்கெடுப்பாக இது அமைந்துள்ளது. காலாணித்துவ ஆட்சிமுறையின் இலகுத்தன்மைக்காக எமது இனத்தின் உரிமைகளை சிங்கள இனத்திடம் தரைவார்த்த பிரித்தானியர்களின் மண்ணில் இன்று ஈழத்தமிழ் மக்கள் எழுதியுள்ள சரித்திரம்.

வரலாற்றின் சுழற்சியின் ஒரு நகர்வாகும். பிரித்தானியா வாழ் ஈழத்தமிழ் மக்களின் இந்த அரசியல் நகர்வு என்பது அனைத்துலகிலும் பரந்து வாழும் எமது தேசத்து உறவுகளுக்கு மீண்டும் ஒரு செய்தியை உரத்து கூறியுள்ளது. ஒற்றுமையே எங்கள் பலம். அதன் மூலம் தான் நாம் எமது உரிமைகளுக்கான பாதையின் அடுத்த கட்ட நகர்வுக்குள் பிரவேசிக்க முடியும்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் ஒன்றுபட்டுள்ள பிரித்தானியாவாழ் தமிழ் மக்களை போல, புலம்பெயர் தமிழ் சமூகம் தமது வேற்றுமைகளை களைந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனபதே அனைவரினதும் ஆவலாகும். அதனை தடுப்பதற்கு சிறீலங்கா தற்போது தன்னால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

எனினும் அதனையும் மீறி நாம் ஒன்றிணையும் போது எம்மை எதிர்ப்பதற்கு இந்த உலகம் துணியப்போவதில்லை. இது தான் பிரித்தானியாவாழ் தமிழ் மக்கள் கூறிச்சென்ற செய்தி

source:athirvu

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails