Friday, November 20, 2009

பிரபாகரனை சுட்டு பொசுக்கி விடுங்கள் என்று உத்தரவிட்டது டெல்லி


பிரபாகரனை சுட்டு பொசுக்கி விடுங்கள் என்று உத்தரவிட்டது டெல்லி: வைகோ

விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்தும் அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்தும் தமிழக முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.


இதுகு‌றி‌த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில்,''இந்திய அரசுக்கு எந்தவொரு கட்டத்திலாவது, இலங்கைக்கு ஆயுதம் கொடுக்காதீர்கள் என்று கலைஞர் கருணாநிதி ஒப்புக்கு ஒரு கடிதம் எழுதியது உண்டா? ரேடார் கொடுக்காதீர்கள் என்று கருணாநிதி எதிர்ப்பைப் பதிவு செய்ததாகக் காட்ட முடியுமா? அப்படிக் காட்டினால், நான் கருணாநிதியைக் குற்றம் சாட்டுவதை விட்டுவிடுகிறேன்.

தமிழர்கள் உள்ளத்தில் எழுந்து உள்ள உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்வதற்காக, இன்று இவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக, திடீரென்று இலங்கை அகதிகள் மீது கரிசனம் காட்டுகிறார். பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்புகிறார்.

தமிழ் மண்ணில் முத்துக்குமார் எழுப்பிய உணர்ச்சியை அழிக்க வேண்டும் என்பதுதான் இவரது நோக்கம். 16 பேர் தீக்குளித்தார்களே, அவர்களுக்காக ஒரு வரி இரங்கல் எழுதியது உண்டா? ஆனால், இன்றைக்கு ஒன்றரைப் பக்கத்துக்குக் குற்றச்சாட்டுகளை வாசிக்கிறார். 

கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தாரிடம்தான் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. செய்தித்தாள்கள் அவர் சொல்வதையெல்லாம் எட்டுக் காலம் போட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தான் நினைத்ததையெல்லாம் எழுதி அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.

ரனில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு கொடுக்காததால்தான், இந்த அழிவு நேர்ந்தது என்கிறார். ரனில் என்ன தமிழர்களுக்கு விடியல் ஏற்படுத்தப் பாடுபடுகிறவரா?

 ஜப்பானில் நடந்த பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் வரவில்லை; பேச்சுவார்த்தைக்கு வராமல் புலிகள் காலத்தை இழுத்தடித்தார்கள்;தாங்களாகவே விலகிக் கொண்டார்கள் என்று ரனில் சொன்னதை இவர் எழுதுகிறார்.

 ரனில் விக்கிரமசிங்கேவினுடைய உள்நோக்கம் விடுதலைப் புலிகளை பலகீனப்படுத்துவது என்பதைத் தான் புரிந்து கொண்டதாக டோக்கியோ பேச்சுவார்த்தை குறித்து 2005 மாவீரர் நாள் உரையில் பிரபாகரன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"எமது மக்கள் எதிர்கொண்ட அவலமான வாழ்க்கைப் பிரச்சனைகளையும் அவசர மனிதாபிமான பிரச்சனைகளையும்கூட, ரனிலின் ஆட்சிப் பீடத்தால் தீர்த்து வைக்கமுடியவில்லை. 

ரனிலின் அரசாங்கமானது பேச்சுகளை இழுத்தடித்து காலத்தைக் கடத்தியதோடு உலக வல்லரசு நாடுகளுடன் ரகசிய கூட்டு சேர்ந்து எமது விடுதலை இயக்கத்திடம் இருந்து ஆயுதங்களைக் களைந்துவிடும் சூழ்ச்சிகர சதிவலையை பின்னுவதில் முழுக்கவனத்தையும் செலுத்தியது. 

இந்த சதித்திட்டத்தின் முக்கிய ஏற்படாகவே 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் டோக்கியோ மாநாடு அரங்கேற இருந்தது. இதனை அறிந்து கொண்ட நான் டோக்கியோ மாநாட்டை பகிஷ்கரித்தோம். பேச்சுகளில் இருந்தும் நாம் விலகிக் கொண்டோம்.'

'தேர்தலில் ரனில் விக்கிரமசிங்கேவுக்கு, பிரபாகரன் ஆதரவு கொடுக்கவில்லை' அதனால்தான் இன்றைய அழிவும் ஏற்பட்டது என்கிறார் கருணாநிதி.

கருணாவைத் துரோகியாக ஆக்கியதே, ரனில் விக்கிரமசிங்கேதான். அவரது கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்தான் எல்லாத் திரைமறைவு வேலைகளையும் செய்து, சகல பாதுகாப்பும் கொடுத்து, கருணாவைத் துரோகியாக ஆக்கினார். 

அப்போது, கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில், இதோ பார், விடுதலைப் புலிகள் இயக்கத்தை நாங்கள் உடைத்துவிட்டோம்; கருணாவைப் பிரித்து விட்டோம்' என்று ரனில் விக்கிரமசிங்கே கட்சிக்காரர்கள் பிரசாரம் செய்தார்கள். பிரபாகர

ன் தேர்தலைப் பகிஷ்கரிக்கச் சொல்லவும் இல்லை; ஓட்டுப் போடுங்கள் என்று கூறவும் இல்லை.

கருணாநிதி ராஜீவ் காந்தியைப் பற்றிச் சொல்லி இருக்கிறார். 

இந்திய இராணுவத் தளபதி ஹர்கிரத் சிங்கிடம், பிரபாகரன் உங்களைச் சந்திக்க வரும்போது சுட்டுப் பொசுக்கி விடுங்கள் என்று இந்தியத் தூதர் தீட்சித் சொன்னபோது, இந்தத் துரோகத்தை இந்திய இராணுவம் ஒருபோதும் செய்யாது என்று மறுத்தபோது, இது என் உத்தரவு அல்ல; டெல்லியின் உத்தரவு என்று தீட்சித் சொன்னதாக ஹர்கிரத் சிங் தன் நூலில் எழுதி இருக்கிறாரே? டெல்லியின் உத்தரவு என்றால் யார் உத்தரவு? அது ராஜீவ் காந்தியின் உத்தரவுதான்.

 கருணாநிதியின் குடும்பத்தாருக்குப் பதவிகளைப் பெற, சோனியா குடும்பத்தாரின் ஆதரவு தேவை. ஆகையால், தமிழ் இனத்துக்கு என்ன கேடு நேர்ந்தாலும் கருணாநிதி கவலைப்படப்போவது இல்லை.

காலம் நியாயங்களை நிரந்தரமாக மறைத்துவிடாது.
 
தமிழ் இனத்துக்குத் தலைவர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டு, பத்துப் பதினைந்து நிலைய வித்துவான்களை வைத்துக்கொண்டு, நாள்தோறும், பாராட்டு மழையில் திளைத்துக் கொண்டு இருக்கிறார்; விழாக்கள், அடைமொழிகள் மூலமாகவே ஈழத்தமிழர் பிரச்சனையில் தமிழ் இனத்துக்கு தான் செய்த கேடுகளை மறைத்து தமிழர்களை திசைதிருப்ப படாதபாடுபடுகிறார்.

2009 ஈழப்போரில் இந்தியாவின் துரோகத்தால், பன்னாட்டு ஆயுத உதவியால், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவும், தோல்வியும் ஏற்பட்டதில் உள்மனதில் மெளனமாக குதூகலித்தவர்தான் கருணாநிதி. இந்த மெளனத்தின் குதூகலம் யார் அறிவார்?

மாத்தையாவின் துரோகத்தைவிட, கருணாவின் துரோகத்தைவிட, ராஜபக்சேயின் கொலைபாதகத்தைவிட, அவர்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற கலைஞர் கருணாநிதி செய்கின்ற துரோகம் கொடுமையானது.

 தமிழ் இனம், ஒருபோதும், இவரை மன்னிக்காது. காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது''என்று தெரிவித்துள்ளார்.


source:nakkheeran

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails