Tuesday, August 5, 2008

மகேந்திர சிங் தோனிக்கு கேல் ரத்னா விருது

மகேந்திர சிங் தோனிக்கு கேல் ரத்னா விருது
இந்திய ஒருதின போட்டி மற்றும் இருபதுக்கு 20 அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யபட்டுள்ளார்.

இதன்மூலம், விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் கேல் ரத்னா விருதை, சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு பெறும் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். கடந்த 1997-98-ம் ஆண்டில் சச்சின் இவ்விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

கேல் ரத்னா விருதுக்கு தோனியின் பெயரை, விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்தது.

இந்நிலையில், மில்கா சிங் தலைமையிலான குழு, கேல் ரத்னா விருதுக்கு தோனியை தேர்வு செய்துள்ளது.

எனினும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வரும் 20-ம் தேதி வெளியிடப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, தோனிக்கு கேல் ரத்னா விருது வழங்குவதற்கான முடிவை, பிசிசிஐ தலைமை அதிகாரி ரத்னகர் ஷெட்டி வரவேற்றுள்ளார்.

"ராகுல் திராவிட்டுக்கு கேல் ரத்னா விருதும், யுவராஜுக்கு அர்ஜூனா விருதும் வழங்கப்படாத தருணத்தில் வருந்தம் இருந்தாலும் கூட, தற்போது தோனிக்கு விருது கிடைக்கப்போவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது," என்று அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த இருபதுக்கு 20 உலக கோப்பை போட்டியில், தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

அதேபோல், ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்புத் தொடரையும், தோனி தலைமையிலான இந்திய அணியே வெற்றி பெற்றது.

இவ்வாறு, இந்திய கிரிக்கெட்டுக்குப் பெருமை சேர்த்தமைக்காகவே, தோனிக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது.

இம்மாதம் 29-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் கேல் ரத்னா, அர்ஜூனா மற்றும் துரோணோச்சார்யா விருதுகளை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வழங்குகிறார்.
(மூலம் - வெப்துனியா)

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails