Friday, August 15, 2008

மீண்டும் கலவரம் ; துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி

காஷ்மீரில் மீண்டும் கலவரம் ; துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி
காஷ்மீரில் இன்று மீண்டும் வெடித்த கலவரத்தை கட்டுப்படுத்த நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்; 4 பேர் காயமடைந்தனர்.

அமர்நாத் நில விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தால் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று 6 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில், இன்றும் மொத்தமுள்ள 10 மாவட்டங்களில், ஸ்ரீநகர் உட்பட 6 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் 11 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

பாராமுல்லா, பந்திபுரா, புல்வாமா மற்றும் ஷோபியான் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்தது.

இந்நிலையில், ஸ்ரீநகரில் போராட்டக்காரர்கள் காவல் நிலையம் ஒன்றை தீ வைத்துக் கொளுத்த முயன்றபோது பாதுகாப்பு படையினர் அவர்களை விரட்டியடிக்க முயன்றனர்.

தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுக்கும் பலனில்லாமல் போகவே, வன்முறையாளர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் ஒருவர் பலியானார்; 4 பேர் காயமடைந்தனர்.

இதனால் காஷ்மீர் பகுதிகளில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஜம்மு பிராந்தியத்திலும் பாதுகாப்பு படையினர் இன்று கொடி அணி வகுப்பு நடத்தியதோடு, தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

ஜம்முவின் கிஸ்த்வார் பகுதியில் நேற்று கலவரக்காரர்கள் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாயினர் என்பதால், இன்று அங்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதனிடையே போராட்டக்காரர்களை கலைக்க சிஆர்பிஎப் எனப்படும் மத்திய ரிசர்வ் படையினர் அளவுக்கு அதிகமாக பலப்பிரயோகத்தை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாற்றை சிபிஆர்பிஎப் மறுத்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails