Friday, September 18, 2009

இலங்கையி்ன் புதிய அச்சம்! ருத்திரகுமாரன்-ஞானக்கோன்-அடேல்…


  

Rajapaksaஇலங்கை அதிகாரிகள் என்னைக் கைது செய்யும் முன் அவர்களைத் தீர்த்துக் கட்டிவிடுவேன் என புலிகளின் முக்கிய பிரமுகரான ஞானக்கோன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜூனியர் விகடன் இதழுக்காக நியூயார்க் நகரிலிருந்து மூத்த பத்திரிக்கையாளர் பிரகாஷ் எம்.சுவாமி எழுதியுள்ள சிறப்புக் கட்டுரை:

கே.பி-யை 'கைது' செய்த கையோடு தங்கள் அடுத்த இலக்கு நியூயார்க்கில் இருந்துகொண்டு தமிழ் ஈழ அரசு பிரகடனம் செய்த வழக்கறிஞர் ருத்திரகுமாரன்தான் என்று இலங்கை அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது!

'கே.பி-'யை தலைவராக அறிவித்து பிரபாகரன் மறைவுக்குப் பிறகு உலக அளவில் ஈழத்தமிழர்களை தன் நாவன்மையால் வசீகரித்தவர் ருத்திரகுமாரன். 'இனி ஆயுதம் வேண்டாம்; அமைதிப் பேச்சு வார்த்தையே தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தரும்!' என்று கூறி இந்தியாவிடமும் நேசக்கரம் நீட்டினார். ஐக்கிய நாடுகள் சபையிலும், சர்வதேச கிரிமினல் கோர்ட்டிலும் இலங்கை அரசின் முகத்திரை கிழியக் காரணமாக இருந்தவரே இந்த ருத்திரகுமாரன்.

"எனது உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து வரலாம்!" என்று அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். ருத்திரகுமாரனை உயிருடன் பிடிக்க இலங்கை அரசின் தீவிரவாதத் தடுப்புத் துறை போலீஸார், ராணுவ அதிகாரிகள் குழு அமெரிக்கா வந்துள்ளது. 'கே.பி.' ஸ்டைலில் 'அலேக்காக' அவரை இலங்கைக்கு தூக்கிச் சென்று புலிகளின் சர்வதேசத் தொடர்புகளை விசாரிக்கத் திட்டமாம்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி காங்கிரஸ் மகாசபை உறுப்பினர்களைசந்தித்து அவர்களை தமிழ் ஈழத்துக்கு ஆதரவாகவும் இலங்கை அரசின் ஜனநாயகப் படுகொலை பற்றியும் ஆதாரங்களுடன் பேசி அவர்களை மசிய வைத்தார். இதில் தொடங்கி ஹிலாரி கிளிண்டன் அதிபர் ஒபாமா வரை தமிழ் ஈழம் பற்றி பேசுமளவு செய்ததில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு என்று கூறப்படுகிறது.

சமீப காலமாக கனடா, ஐரோப்பிய நாடுகளில் அடிக்கடி விஜயம் செய்து நாடு கடந்த தமிழ் ஈழம் ஆதரவாக மக்களைத் திரட்டியும் வந்தார். இது இலங்கைக்கு பெரும் குடைச்சலைக் கொடுத்துவந்தது. ருத்ராவை எப்படியாவது பிடித்துப் போட்டுவிட்டால்…. புலிகளே இல்லாமல் செய்து விடலாம் என்று கணக்குப்போட்ட இலங்கை அரசு அவரை கைதுசெய்ய தனிப்படையே அமைத்தது.

அமெரிக்கா ஒன்றும் மலேசியா அல்ல…

இது பற்றி அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் பேசியதில், "அதுஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை…" என்று கூறினார்கள்.

"அமெரிக்கா ஒன்றும் மலேசியா  இல்லை. இங்கு சட்டதிட்டங்களே வேறு. முதலில் ஓர் அமெரிக்க பிரஜையைக் கைது செய்ய சர்வதேச வாரண்ட் வேண்டும். அவர்மீது வழக்குப் பதிவாகி நீதிபதியின் தீர்ப்பு நகலை முதலில் தரவேண்டும். முக்கியமாக அந்நாட்டுடன் 'நாடு கடத்தப்படுவதற்கான ஒப்பந்தம்' அமலில் இருக்கவேண்டும். இலங்கையிடம் அமெரிக்காவுக்கு அப்படி ஒரு ஒப்பந்தமோ வாக்குறுதியோ இல்லை.

கே.பி. கைது வேறு கதை!.

அவர் இண்டர்போல் அமைப்பினால் தேடப்பட்ட சர்வதேசக் குற்றவாளி. ஆகவே, மூன்று நாடுகளைக் கடந்து கடத்திப்போக முடிந்தது. எங்களுக்குத் தெரிந்த வரை ருத்திரகுமாரன் மீது எவ்வித வழக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரை கைது செய்வதானால் முதலில் எங்கள் அனுமதி பெறவேண்டும். அமெரிக்காவின் தனிமனித சுதந்திரம் மிகவும் போற்றப்படக் கூடியது!" என்று கூறினார்கள்.

ருத்திரகுமாரனின் நடவடிக்கைகளை அமெரிக்க அரசேகூட மிகத் தீவிரமாகக் கண்காணித்து வந்தாலும் அவர் மீது தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. இவ்வளவுக்கும் நியூயார்க் மாநகரில் பிரபாகரன் படம், புலிக்கொடி ஏந்தி பத்தாயிரம் ஈழத் தமிழர்களை வைத்துப் பேரணியைப் நடத்தியவர் ருத்திரகுமாரன்.

ருத்திரகுமாரனையும் சேர்த்து நான்கு தலைவர்களை இலங்கை அரசு 'கைது' செய்யத் திட்டமிட்டுள்ளது. அவர்கள் லண்டனில் வாழும் அடேல் பாலசிங்கம், கலிஃபோர்னியாவில் வாழும் ஜெயந்தா டொனால்டு ஞானக்கோன் மற்றும் ஐரோப்பாவிலுள்ள காஸ்ட்ரோ ஆதரவாளரான நெடியவன் ஆகியோர்.

ஆண்டன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பிறகு அவர் மனைவி அடேல், பல்வேறு குழுக்களாக உள்ள தமிழ் ஈழத் தலைவர்களை தனது அன்பினால் தாயைப்போல் உரிமையுடன் கண்டித்து ஒருங்கிணைத்தார். லண்டனில் எந்த ஆர்ப்பாட்டம் என்றாலும் முதலில் நிற்பார். இவரது சக்தி வெள்ளையர்களை புலிகளின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.

தீர்த்துவிடுவேன்…

ஞானக்கோன் ஒரு விமான பைலட். முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கேயின் நெருங்கிய நண்பர். கலிஃபோர்னியாவில் வாழும் இவர் புலிகளுக்கு ஆயுத சப்ளை ஏஜண்ட் என்று கூறுகிறது இலங்கை அரசு. லக்ஷ்மண் கதிர்காமர் கொலையிலும் இவரை வளைத்துப்போடப் பார்க்கிறது. ஆனால், எதற்கும் அஞ்சாதவர் ஞானக்கோன். "என்னைப் பிடிப்பதற்குள் அவர்களைத் தீர்த்துவிடுவேன். அமெரிக்காவில் உயிரை காப்பாற்றிக் கொள்ளக் கொன்றால் குற்றமில்லை!" என்று சிரிக்கிறார் அவர்.

இலங்கையில் விழுந்த பிணக் குவியல்களையும், நிகழ்ந்த பட்டினிச் சாவுகளையும் கண்டு கொதித்ததோடு… பிஞ்சுக் குழந்தைகளை வதைமுகாம்களில் அடைத்துக் கொடுமை செய்ததை அமெரிக்காவில் எடுத்துச் சொல்லி பிரசாரம் செய்தவர் ருத்திரகுமாரன். கழிப்பிடம் இல்லாத பெண்களும், கஞ்சி இல்லாத குழந்தைகளையும் கண்டு அமெரிக்க அரசும்இ ஐக்கிய நாடுகள் சபையும் கடும் கண்டனம்  தெரிவித்தன.

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியான 'சேனல்-4′ வெளியிட்ட பயங்கரமான காட்சிகளைக் கண்டு உலகமே அதிர்ந்தது. அதே சேனல், எப்படி அப்பாவி மக்கள் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள் என்றும் காட்டியது. ஐக்கிய நாடுகள் இந்த வீடியோக்களை மிக மிக சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளது.

இதனால், கடுப்பாகிப்போன இலங்கை அரசு, கூலிப் படைகளை வைத்தாவது அமெரிக்காவில் ருத்திரகுமாரனை போட்டுத் தள்ளவும் தயாராகி வருகிறது என்கிறார்கள்.

"என் தந்தை யாழ் மாநகரின் மேயராக இருந்தவர். எனக்கு அந்த மண்ணின் மீதும் மக்களின் மீதும் உள்ள பிணைப்பை என்ன பயமுறுத்தினாலும் போக்கி விட முடியாது.

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் உலகம் முழுவதும் இப்போது பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிட்டது. என்னை அவர்கள் அழிக்கப் பார்ப்பது உண்மைதான்! என் உயிரைப்பற்றி கவலைப்படுகிறவன் இல்லை நான். ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் உயிர்களைப் பற்றித் தான் கவலைப்படுகிறேன்", என்று நறுக்கென்று இதற்கு பதில் தருகிறார் ருத்திரகுமாரன்--

 

 
source:nerudal
www.thamilislam.co.cc
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails