Monday, May 5, 2008

தங்கம் மோசடி -இன்று(செவ்வாய்கிழமை) விசாரணை நடக்கிறது

தங்க மோசடி நிறுவனத்தில் மீண்டும் போலீஸ் அதிரடி சோதனை
87 கிலோ தங்கம் உள்பட ரூ.50 கோடி பொருட்கள் பறிமுதல்
கமிஷனர் தலைமையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை


சென்னை, மே.6-

சென்னையில் தங்க மோசடி நிறுவனத்தில் மீண்டும் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். 87 கிலோ தங்கம் உள்பட ரூ.50 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

தங்க மோசடி

சென்னை சேத்துபட்டு மெக்னிக்கல் ரோட்டில் ``கொஸ்ட் நெஸ்ட் இன்டர்நேஷனல்'' என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு உலக நாடுகளில் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் இதன் கிளைகள் உள்ளது. இதன் தலைமை அலுவலகம் ஹாங்காங்கில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் தங்க மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து, சேத்துபட்டில் இயங்கும் கிளை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அங்கிருந்த 71 கிலோ தங்ககாசுகள் உள்பட 21 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மற்றும் ஆயிரக்கணக்கான கைக்கடிகாரங்கள், தாஸ்தாவேஜ×கள் கைப்பற்றப்பட்டன.

ஊழியர்கள் கைது

அலுவலக மேலாளர் புஷ்பம் மற்றும் ஊழியர்கள் வித்யா, அரிபிரபாகரன், சந்திரசேகரன், அகஸ்டின், தண்டபாணி, சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தற்போது பிற ஆசிய நாடுகளிலும் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிலிப்பைன்சில் இந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது. நேபாளத்தில் இவர்களுடைய வணிக செயல்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அங்கே அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இந்த நிறுவனத்துக்கு எச்சரிக்கை நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. அங்கேயும் அதன் ஊழியர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தோனேஷியாவில் இந்த நிறுவனத்தின் 2 மூத்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆகவே, உலக அளவில் இந்த நிறுவனத்தின் மீது பல்வேறு மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாஸ்போர்ட் முடக்கம்

இந்த நிறுவனத்தின் தலைவராக செயல்பட்ட விஜய ஈஸ்வரன் ஆந்திராவை சேர்ந்தவர். அவருக்கு `தத்தோ' என்ற பட்ட பெயர் உண்டு. இவர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவரது பாஸ்போர்ட்டை முடக்குவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இவரை சர்வதேச போலீஸ் உதவியுடன் கைது செய்து சென்னைக்கு கொண்டு வருவது குறித்தும் போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.

இதற்கிடையே இந்த நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கி வைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னையை தொடர்ந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள இந்த நிறுவனத்தின் கிளைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

ரூ.50 கோடி

இதற்கிடையே சென்னை சேத்துபட்டில் உள்ள அலுவலகத்தை போலீசார் மீண்டும் சோதனை செய்தனர். அப்போது அங்கே ரகசிய அறையில் ஒரு மூட்டையில், 16 கிலோ தங்க நாணயங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுவரை 87 கிலோ தங்க நாணயங்கள், 898 கிலோ வெள்ளி நாணயங்கள், 8,362 கைக்கடிகாரங்கள், 250 செல்போன்கள், 2 கார்கள், 12 லேப்டாப், பயோ டிஸ்க் மருந்து பொருட்கள் உள்பட ரூ.50 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களை கோர்ட்டு மூலம் ரிசர்வ் வங்கியில் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் கோர்ட்டு மூலம் இந்த பொருட்கள் விற்கப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பணமாக திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

பொது மக்கள் முற்றுகை

இந்த நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்ததாக புகார் கூறி நேற்று காலையில் ஆண்களும், பெண்களுமாக சுமார் 100 பேர் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களுடைய மனுக்கள் முறைப்படி வாங்கப்பட்டது. முற்றுகையிட்ட ஆண்களும், பெண்களும் சரமாரியாக புகார் கூறினார்கள். ஏற்கனவே கொடுக்கப்பட்ட தங்ககாசுகள் 24 காரட்டில் செய்யப்படவில்லை என்றும் 18 காரட்டில் செய்யப்பட்டதாகவும் புகார் தெரிவித்தனர்.

புகார் தெரிவித்த பல பெண்கள் கதறி அழுதார்கள். நகைகளை விற்று பணம் கொடுத்ததாகவும், வட்டிக்கு கடன் வாங்கி பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். சென்னை கொளத்தூரை சேர்ந்த காண்டிராக்டர் ஒருவர் கூறும்போது, `தனது தொழிலை விட்டு, விட்டு தங்ககாசு திட்டத்தில் சேர்ந்து கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்ற பேராசையுடன் செயல்பட்டு, தற்போது எந்த தொழிலும் இல்லாமல் குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் அவதிப்படுவதாக' மனம் நொந்து போய் பேசினார்.

கமிஷனர் ஆலோசனை

நேற்று இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் கமிஷனர் நாஞ்சில்குமரன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இணைகமிஷனர் ரவி, துணை கமிஷனர் சம்பத்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இ.பி.கோ. 420 (நம்பிக்கை மோசடி), 120-பி (சதித்திட்டம்), 506-2 (கொலை மிரட்டல்) மற்றும் தமிழ்நாடு பரிசு பொருள், சீட்டு தடை சட்ட பிரிவு 5 மற்றும் 6 உள்பட மொத்தம் 8 சட்டப்பிரிவின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

ஜாமீனில் விடுதலை

தங்ககாசு மோசடி தொடர்பான வழக்கில் 7 பேர் கைதானதை கண்டித்து ஏராளமான பேர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதையொட்டி 33 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இவர்களை ஜாமீனில் விடக்கோரி சென்னை எழும்பூர் 13-வது கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

நேற்று இந்த மனு மீது விசாரணை நடத்தி கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள 33 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இரு நபர் ஜாமீன் கொடுக்க வேண்டும் என்றும், 33 பேரும் தினமும் மாலையில் எழும்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீனில் விட கோர்ட்டு ஆணையிட்டது.

தங்க மோசடி வழக்கில் கைதான 7 பேரையும் ஜாமீனில் விடக்கோரி சென்னை எழும்பூர் 5-வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீது இன்று(செவ்வாய்கிழமை) விசாரணை நடக்கிறது
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails