Saturday, May 24, 2008

மதபோதகர் மீது தாக்குதல்-தென்னை மட்டையால் அடித்து உதைத்தனர்


கிறிஸ்தவ மதபோதகர் மீது தாக்குதல்
தென்னை மட்டையால் அடித்து உதைத்தனர்


மேட்டுப்பாளையம், மே.24-

காரமடை அருகே கிறிஸ்தவ மதபோதகர் தாக்கப்பட்டார். மர்ம ஆசாமிகள் சிலர் தென்னை மட்டையால் மதபோதகரை அடித்து உதைத்து விட்டு தப்பி விட்டனர்.

மதபோதகர்

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தோழம்பாளையத்தை அடுத்து மேல்வாவி கிராமம் உள்ளது. இங்கு மலை வாழ் மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். இந்த பகுதியில் நீதிராஜ் (வயது 52) என்பவர் ஒரு சிறிய ஜெப வீடு அமைத்து ஜெபம் செய்து வருகிறார். நோயால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதை தவிர பள்ளிக்கூடம் போகாத சிறுவர்களை அழைத்து அவர்களை பள்ளியில் சேர்ப்பது, முதியோர்களுக்கு மருந்து மாத்திரை வாங்கிக்கொடுப்பது போன்ற பணிகளையும் கிறிஸ்தவ மத போதகர் நீதிராஜ் செய்து வந்தார். இதுபோன்ற செயல்பாடுகள் அந்த பகுதியில் வசிக்கும் சிலருக்கு மன எரிச்சலை ஏற்படுத்தியது.

தாக்குதல்

இந்த நிலையில் மதபோதகர் நீதிராஜ் நேற்று மேல்வாவி பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று துண்டுபிரசுரம் கொடுத்து போதனை செய்தார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மதபோதனை செய்ய வேண்டாம், உடனே திரும்பிச்சென்று விடுமாறும் கூறினர். ஆனால் நீதிராஜ் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் அருகில் கிடந்த தென்னை மட்டையை எடுத்து வந்து மதபோதகர் நீதிராஜை அடித்து உதைத்தனர். இதில் நீதிராஜின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது கை மற்றும் கால்களில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனால் அவர் வலிதாங்க முடியாமல் அலறி துடித்தார். அதற்குள் அவரை தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

மதபோதகரின் அலறலம் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து அவரை காரமடை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தகவல் அறிந்ததும் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி. ராஜா, காரமடை இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்று நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மதபோதகரை தாக்கியவர்களை வலை வீசித்தேடி வருகிறார்கள்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=414589&disdate=5/24/2008&advt=2

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails