Thursday, March 20, 2008

கேமரா மொபைலில் குடும்ப நபர்கள் போட்டோ வைத்திருப்பவரா நீங்கள்?உஷார்

கேமரா மொபைல் வைத்திருப்பவர்கள் உஷார்.

ஒரு

கால கட்டத்தில் மொபைல் என்பது நடுத்தர வர்க்கம் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஆடம்பர பொருளாக இருந்த நிலை மாறி இன்று அத்தியாவசிய பொருளாக மாறியது மட்டுமின்றி , அனைவரும் வாங்க கூடிய விலையில் கிடைக்கவும் செய்கிறது.


அனைத்து தரப்பினரும் மொபைல் வைத்திருப்பதும், அது தொடர்பாக நடைப்பெறும் நகைச்சுவை விஷயங்களும் ஏராளம். அது பற்றி மிக பெரிய பதிவே போடலாம்.

இந்த பதிவு கேமரா பொறுத்தப்பட்ட மொபைல் பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய ஒரு ஆபத்து பற்றியே.

கேமரா பொருத்தப்பட்ட மொபைல்கள் இப்போது ஒரு fashion ஆக மாறிவிட்டது, மொபைல் வாங்குவோரில் 75% பேர் கேமராவுடன் தான் வாங்குகிறார்கள். வாங்கிய புதிதில் ஆர்வமுடன் கேமராவை பயன்படுத்தி கண்ணில் படுவதை எல்லாம் சுட்டுத்துள்ளுவது, சிறிது காலத்திற்கு பிறகு மொபைலில் கேமரா இருப்பதையே மறந்துவிடுவதும் தனிக்கதை.

மொபைல் கேமராவில் புகைப்படம் எடுப்போர் மிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமிது. உங்களுக்கே தெரியாமல் உங்கள் மொபைல் கேமராவில் இருக்கும் படங்களை கையாடல் செய்யும் நவின திருட்டு ஒன்று சத்தமில்லாமல் பரவி வருகிறது. அதிலும் நீங்கள் எடுத்து, பின்பு அழித்துவிட்ட படங்கள் கூட திருடப்படுகிறது என்பது சற்று அதிர்ச்சியான செய்தி.

எப்படி திருடப்படுகிறது என்று பார்பதற்கு முன்னால் , எத்தகைய படங்கள் திருடப்படுகிறது என்று பார்க்கலாம்.

சாதாரணமாக எடுக்கப்பட்ட இயற்கை காட்சிகள், விலங்குகளின் படங்கள் திருடப்படுவதில்லை , அவை திருடப்பட்டாலும் நாம் பெரிதும் வருத்தப்படவேண்டியதில்லை. மாறாக இந்த திருட்டுக்கு இலக்காவது உங்கள் மொபைலில் இருக்கும் உங்கள் வீட்டு பெண்களின் புகைப்படங்கள்.

அனேகமாக பலரும் ஆசை ஆசையாக தங்கள் மனைவியையோ, காதலியையோ, அல்லது அக்கா , தங்கை, அண்ணி, மாமி என எந்த உறவு முறைப்பெண்களையும் மொபைல் கேமராவில் படமெடுப்பது வழக்கம்.

குறிப்பாக கேமரா மொபைல் வாங்கிய புதிதில் ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களையும் , உறவினர்களையும் ஒருமுறையாக கேமராவில் சுட்டுவிடுவது என்பது எழுதப்படாத விதி. இது ஒரு ரகம்.

மற்றொரு ரகம் சற்று வித்தியாசமானது, காதலி , மனைவியுடன் அந்தரங்கமான சில நிகழ்வுகளையும் மொபைலில் எடுப்பவர்களும் உண்டு. வேறு தவறான எண்ணம் எதுவுமின்றி , நமக்குள்தானே, ஜஸ்ட் பார்த்துவிட்டு அழித்துவிடலாம் என்று எடுப்பவர்களும் உண்டு.

எடுத்தபின்பு ,பார்த்துவிட்டு அழித்தும் விடுவர். அழித்துவிட்டோம் , என்ன பிரச்சனை என்று மெத்தனமாக இருப்பார்..

ஆனால் இங்கே தான் பிரச்சனை, இப்படிப்பட்ட புகைப்படங்கள் தான் திருடுபவரின் இலக்கு.

எப்படி திருடப்படுகிறது? யார் திருடுவது?

தொலைந்துப்போவது தவிர்த்து, 2 காரணங்களுக்காக நம் மொபைலை நமக்கு அறிமுகமில்லா நபரிடம் கொடுப்போம்.

1.
மொபைல் கோளாறு , சரி செய்ய கொடுப்போம்.

2.
மொபைலில் உள்ள மெமரி கார்டில் பாட்டு, கேம்ஸ் , அல்லது ஏதேனும் புது மென்பொருள் சேர்க்க கடைக்காரர் ஒருவரிடம் கொடுப்போம்.

இப்படி கொடுக்கும் போது தான் இந்த திருட்டு நடக்கிறது. நாம் மொபைல் மெமரியிலோ அல்லது மெமரி கார்டிலோ வைத்திருக்கும் புகைப்படங்கள் இங்கே பிரதி எடுக்கப்படுகிறது.

அட போப்பா, நாங்க எல்லாம் உஷார் உலகநாதன்ஸ், அப்படி கொடுக்கறப்போ எல்லா மேட்டரையும் அழித்துவிட்டு (Delete) தான் கொடுப்போம் என்று சொல்கிறீரா?? அப்பவும் நீங்க உண்மையிலேயே உஷார் உலகநாதன் இல்லைங்க.. உஷார்னு நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு பாவபட்ட ஜென்மம் தான்.

இப்படி அழிக்கப்படும் படங்களை மீட்டெடுக்கவே (Restore) பல மென்பொருட்கள் உள்ளது. அந்த மென்பொருட்கள் இப்படிபட்ட ஆசாமிகளிடன் நிறையவே உள்ளது. அவற்றை பயன்படுத்தி அழிக்கபட்ட படங்களை சுலபமாக மீட்டெடுக்கின்றனர்.

உங்களுக்கு தெரியாமலேயே உங்களின் மொபைலில் உள்ள படங்கள் / ஆவணங்கள் திருட்டுப்போகிறது.

அப்படி திருடப்படும் படங்கள், இதற்காகவே அலையும் ப்ரோக்கர்களுக்கு நல்ல காசுக்கு விற்கப்படுகிறது. அப்படி கை மாறும் படங்கள் எங்கெங்கு போகும், எப்படியெல்லாம் உபயோகப்படுத்தப்படும் என நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டுமா??

எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புக்கும் எதிர்மறையான விஷயங்கள் இருப்பது இயல்பு, கேமரா மொபைல் அதற்கு விதிவிலக்கல்ல.

ஆக மக்கள்ஸ் உஷாராக இருக்கவேண்டியது நாம் தான். இனி உங்கள் மொபைல் கேமராவில் புகைப்படம் எடுக்கும் போதும், உங்க மொபைல் சர்வீஸ் கொடுக்கும் போதும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

நான் கேட்டத சொல்லிட்டேன், அப்புறம் உங்க இஷ்டம். நம் அந்தரங்கம் அடுத்தவர் அனுபவிக்கவும், காசு பார்க்கவும் என்றாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

குறிப்பு: மொபைல் பழுது பார்க்கும் கடை வைத்திருப்பவர் அனைவரும் இப்படி என்று சொல்லவில்லை, இப்படியும் பலர் இருக்கிறார்கள் , காசு பார்க்கிறார்கள், நமக்கு கவனம் தேவை என்பதே இந்த பதிவின் கருத்து.

முரளி

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails