Saturday, March 29, 2008

உலகம் அழியப் போகுது : ரஷ்யாவில் பரபரப்பு

 

 

மாஸ்கோ : வரும் மே மாதத்தில் உலகம் அழியப் போவதாகவும், அதுவரை தனிமையில் பிரார்த்தனையில் ஈடுபடப் போவதாகவும் ரஷ்யாவில் ஒரு அமைப்பு, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும், "டூம்ஸ்டே' என்ற வழிபாட்டு அமைப்பு, ரஷ்யாவில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள், வரும் மே மாதத்துடன் உலகம் அழியப் போவதாகவும், அதுவரை அவர்கள் தனிமையில் பிரார்த்தனை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்காக கடந்த அக்டோபரில் இருந்து ரஷ்யாவின் பென்சா மலைப் பகுதியில், ஒரு குகையில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அவர்கள், உலகம் அழியும் வரை, இந்த குகையில் இருந்து வெளிவர மாட்டோம் என மறுத்து வருகின்றனர். இவர்களை வெளியே கொண்டு வர, துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷ்ய அதிகாரிகள் கூறியிருப்பதாவது: இந்த அமைப்பின் தலைவர் பியோட் குஸ்னெட்ஷோவை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில், குகையில் இருந்து ஏழு பெண்கள் வெளியே வந்துள்ளனர். பியோட்டுக்கு கோர்ட் உத்தரவின் பேரில், மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெளியில் வந்த பெண்கள் அனைவரும், நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை எதுவும் தேவையில்லை. இவர்கள் அனைவரும், அவர்களது விருப்பப்படி பியோட் குஸ்னெட்ஷோவின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், மே மாதம் உலகம் அழியும் என்பதில் அவர்கள் உறுதியுடன் இருக்கின்றனர். அவர்களது கருத்துக்கு மதிப்பளிக்கப்படும். இவர்களை தவிர மேலும், 28 பேர் இன்னும் அந்த குகையில் உள்ளனர். அவர்களை வெளியேற்றுவது குறித்து தொடர்ந்து பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

http://www.dinamalar.com/

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails