Thursday, August 6, 2009

கைதுசெய்யப்பட்ட KP கொழும்பு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது

  
 

வியாழக்கிழமை(06.09.2009) மாலை பாங்கொக் நகரில் கைதான குமரன் பத்மநாதனை விசாரணைசெய்ய, அவரை அவசர அவசரமாக கொழும்பு கொண்டுசென்றதாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை நள்ளிரவு, கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் இருந்து மிகவும் இரகசியமாகவும், பாதுகாப்பாகவும் ஒரு நபர் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக, அதிர்வு இணையத்திற்கு செய்திகள் கசிந்துள்ளன. விமானநிலைய ஊளியர்கள் இச் சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர். இருப்பினும் பத்மநாதனைக் கைதுசெய்த அதிகாரிகள் இலங்கை வந்திருக்கலாம் என்ற சந்தேகமும் முன்வைக்கப்படுகிறது.

உலங்கு வானூர்தி ஒன்று அவசரமாகத் தரையிறங்கி, பின்னர் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து அகன்றதாகவும்,  இச் சம்பவம் நள்ளிரவில் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இச் செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை. சர்வதேச காவல்துறையான இன்டர்போல் ஊடாக, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுமே பிடியாணை பிறப்பித்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயம். இதனால் பிடியாணை பிறப்பித்த நாட்டிடம் இவரை இன்டர்போல் ஒப்படைத்ததா என்பது, இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

புலிகள் இயக்கத்தை தாமே வழிநடத்தப் போவதாகக் கூறிவந்த குமரன் பத்மநாதன், ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு அரசியல் ரீதியாக போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் கூறியிருந்தார். அத்துடன் இந்தியாவின் துணையுடன் தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில், போர் முடிவடைவதற்கு முன்னரே, புலிகளின் ஆயுதங்கள் இனி மௌனமாகும் எனக் குறிப்பிட்ட அவர், இலங்கையில் விடுதலைப் புலிகள் அரசியலில் ஈடுபட ஏதுவான களநிலை எப்போதும் இருந்திருக்கவில்லை என்ற கருத்தையும் முன்வைத்திருந்தார்.

ஆயுதப்போராட்டமானலும் சரி அரசியல் நகர்வானாலும் சரி, இலங்கைத் தமிழர் இனப்பிரச்சனை பற்றி பேசுவோர் எல்லோரையும், பயங்கரவாதிகள் என்ற முத்திரையை குத்துகிறது இலங்கை அரசு.

மேல் குறிப்பிட்ட தகவல்களை ஒத்த செய்தியை இந்து இணையமும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

INTERPOL WEBPAGE

 

PREVIOUS  NEWS: 06 -08-2009  AT  18.20 GMT  LONDON

விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான KP என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை தாம் கைதுசெய்துள்ளதாக இன்டர்போல் போலிசாரின் ஆசிய தலைமயகம் தெரிவித்துள்ளது. இச் செய்தி இன்றிரவு உத்தியோகபூர்வமாக இலங்கை அரசிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் பாங்கொக் நகரில் இவர் கைதானதாகக் கூறப்படுகிறது. பாங்கொக் செய்திச் சேவைகள் இவர் கைதை உறுதிசெய்துள்ளன.

இலங்கை அரசானது பத்மநாதனை 48 மணி நேரத்திற்குள் இலங்கைக்கு நாடுகடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அறியப்படுகிறது. இருப்பினும் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை. இது இவ்வாறிருக்க, குமரன் பத்மநாதனின் உண்மையான உருவ அடையாளங்களை மிகச் சொற்பமானபேரே பார்த்திருப்பதாகக் கூறப்படுகிறது. தாய்லாந்தில் கைதாகியிருக்கும் நபர் உண்மையிலேயே குமரன் பத்மநாதன் தானா என்ற சந்தேகம் பலரிடம்காணப்படுகிறது.

சமீபத்தில் மலேசியாவில் தங்கியிருந்த பத்மநாதன் பல பொதுமக்களைச் சந்தித்துள்ளார். பலபொது இடங்களில் நேரடியாக பிரசன்னமாகியிருந்தார் என்றும் கூறப்படுகிறது

இவர் கைது குறித்து அறிந்த சிங்களவர் கொழும்பில் வெடிகொழுத்தி கொண்டாடியுள்ளனர். இவரை இலங்கை அரசாங்கம் தம்மிடம், 48 மணிநேரத்தில் ஒப்படைக்கும் படி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அது நடக்குமாயின், மேலும் பாரிய சிக்கல்களை அது தொற்றுவிக்கும், ஆகவே இவரை இலங்கைக்கு நாடுகடத்துவதை தடுக்க புலம்பெயர் தமிழ் நிபுணர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பது நல்லது.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails