Saturday, August 22, 2009

அமெரிக்கா எச்சரிக்கை:மீள்குடியேற்றத்தில் முன்னேற்றம் இல்லை எனில் அனைத்துலக சமூகத்தின் ஆதரவை சிறிலங்கா இழக்கும்

மீள்குடியேற்றத்தில் முன்னேற்றம் இல்லை எனில் அனைத்துலக சமூகத்தின் ஆதரவை சிறிலங்கா இழக்கும்: அமெரிக்கா எச்சரிக்கை
 
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் அனைத்துலக சமூகத்தின் ஆதரவை சிறிலங்கா இழக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என அமெரிக்கா கடுமையாக எச்சரித்திருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சிறிலங்கா அரசு தோற்கடித்திருப்பதை அமெரிக்கா வரவேற்பதாக தெரிவித்த அமெரிக்காவின் தென்னாசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளரும், சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவருமான றொபேர்ட் ஓ பிளேக், "இருந்தபோதிலும் இடம்பெயர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை உடனடியாக சிறிலங்கா அரசு மீளக்குடியமர்த்துவதுடன், அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" எனவும் வலியுறுத்தினார். 
 
அனைத்துலக சமூகத்தினால் சிறிலங்கா மதிக்கப்படுவதாகத் தெரிவித்த பிளேக், அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் மட்டுமன்றி, கடன் வழங்கும் நாடுகள், உதவி நிறுவனங்கள் மற்றும் அனைத்துலக மனிதார்ந்த நிறுவனங்களும் மீள்குடியேற்றம் தாமதமாவதையிட்டு தமது கரிசனையை வெளியிட்டு வருவதாகவும் சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார். 
 
மீள்குடியேற்றத்தில் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எதனையும் சிறிலங்கா அரசு மேற்கொள்ளவில்லை என்றால், சிறிலங்காவுக்கான உதவிகளை அமெரிக்கா தடுக்குமா எனக் கேட்கப்பட்ட போது, சிறிலங்காவுக்கு அதிகளவு மனிதார்ந்த உதவிகளைக் கொடுக்கும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்காவே இருப்பதாகத் தெரிவித்தார். 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.
 
"இருந்தபோதிலும் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் போன்றவற்றில் சிறிலங்கா அரசு எந்தளவுக்கு முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்பதில் சிறிலங்காவுக்கான எதிர்கால உதவிகள் தங்கியிருக்கலாம்" எனத் தெரிவித்தார்.

  

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails