Friday, August 7, 2009

குமரன் பத்மநாதனைக் கைதுசெய்ய உதவிய பிரபாகரனின் தொலைபேசி !!!!

தலைவர் பிரபாகரனின் செய்மதி தொலைபேசி குமரன் பத்மநாதனைக் கைதுசெய்ய உதவியதாம்
 

நந்திக்கடற்களப்பில் கைப்பற்றியதாகக் கூறப்படும் செய்மதி தொலைபேசி ஒன்று பிரபாகரனுக்குச் சொந்தமானது எனவும், அதில் காணப்பட்ட மற்றொரு செய்மதி தொலைபேசி இலக்கத்தை வைத்தே தாம் குமரன் பத்மநாதன் நடமாட்டத்தை அறிந்ததாகவும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் ரோய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளனர். பெயர் குறிப்பிட விரும்பாத மூன்று அதிகாரிகள் இத் திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

செய்மதி தொலைபேசியில் இருந்த இலக்கத்தினூடாக, மற்றைய செய்மதி தொலைபேசியின் இலக்கத்தைப் பெற்ற இலங்கை புலனாய்வுப் பிரிவினர், பின்னர் அது ஆசிய நாடு ஒன்றில் இருந்து பாவிக்கப்படுவதை அறிந்ததாகவும், சிங்கப்பூர், மலேசியா, மற்றும் தாய்லாந்து ஆகிய 3 நாடுகளுக்கும் இலங்கையில் இருந்து 3 புலனாய்வுப் பிரிவினர் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

குமரன் பத்மநாதனை கைதுசெய்வது தமது நோக்கமல்ல என்று தெரிவித்த அந்த அதிகாரிகள், அவரை சுட்டுக்கொல்லவே தாம் ஆட்களை அனுப்பியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

எனினும் புதன்கிழமை மாலை அவர் கைதுசெய்யப்பட்டார் என்ற தகவல் தமக்கு கிடைத்ததாகத் தெரிவித்த அவ்வதிகாரிகள், இறுதி நேரத்தில் அவரை கொல்லும் திட்டம் மாற்றப்பட்டு, உயிருடன் பிடிக்குமாறு மேலதிகாரிகள் உத்தரவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

அவர் இலங்கை கொண்டுசெல்லப்பட்டதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றபோதும், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 2 நாடுகளும் முறையே அவர் தமது நாட்டில் கைதாகவில்லை எனத் தெரிவிக்கின்றன.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 'மஜீத் இந்தியா' என்று குறிப்பிடப்படும் பகுதியில் உள்ள 'ரியூன் ஹோட்டல்' (Tune Hotel) விடுதிக்கு ஒரு சந்திப்புக்காக சென்றிருந்தபோது குமரன் பத்மநாதன் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுவதை ரியூன் ஹோட்டல் முற்றாக மறுத்துள்ளது.

கோலாலம்பூரில் உள்ள இந்த விடுதி உரிமையாளர்களை அதிர்வு நிருபர் அணுகி நிலைமையை விசாரிக்க முற்பட்டபோது, அவர்கள் மேலதிகச் செய்திகள் எதனையும் தர மறுத்துவிட்டனர்.

இதே நேரம் தாய்லாந்து பிரதமர் அப்சிட் வெஜ்யஜிவா, தமது நாட்டில்வைத்து குமரன் பத்மநாதன் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டாரா என அறியுமாறு தாய்லாந்து புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க FBI பாணியில் வேற்று நாட்டில் ஊடுருவி, எதிரியை கைதுசெய்துள்ளது இலங்கை அரசு. இச் செயலானது, இவ் இரு நாடுகளுக்குமிடையே பரஸ்பரம் உள்ள நல்லுறவைப் பாதிக்கலாம்.

இருப்பினும் இவ்வளவு நாளாகியும் செய்மதித் தொலைபேசி இலக்கத்தை குமரன் பத்மநாபன் மாற்றாமல் இருந்திருப்பார் என்பது மிகுந்த சந்தேகம். அத்துடன் செய்மதித் தொலைபேசியூடாக ஒருவர் நடமாட்டத்தைக் கண்காணிப்பது மிக மிக சிரமமானதாகும். இத் தகவல் மூலம் இலங்கை அரசு தாமே முற்றுமுழுதாக பத்மநாதனைத் தேடி கண்டுபிடித்திருப்பதான ஒரு பிரமையை ஏற்படுத்தியுள்ளது. இதன் உள்நோக்கம் அரச சார்பாகச் செயல்பபடும் தமிழினத் துரோகிகளைப் பாதுகாப்பதும், தொடர்ந்தும் அவர்கள் ஊடுருவ ஏதுவான சூழலை ஏற்படுத்த இலங்கை அரசு முயல்வதாகக் தெரிகிறது.

இது குறித்த உண்மையான தகவல்கள் பல வெளியாக இருப்பதால், அதுவரை அதிர்வின் செய்தியுடன் இணைந்திருங்கள்

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails