Friday, July 3, 2009

புத்தம் கஷ்டம் கச்சாமி! இப்போ புரியுதா பிரபாகரன் தமிழீத்தை மட்டுமே தீர்வாக ஏன் வைத்தார் என்று?

 
இலங்கை ஒரு ரத்தவாடை வீசும் பிணபூமியாக சிங்களர்களால் மாற்றப்பட்டு பல பத்தாண்டுகள் ஆகிவிட்டது. இப்போ பிரபாகரன் ஒழிந்துவிட்டார் என்று கொக்கரித்த ராசபக்சே அதைவிட சிக்கலான சூழலில் மாட்டியிருக்கிறார் என்பதே நிசம்! அப்படி என்ன ஆகிவிட்டது அங்கே அவருக்கு என்று அப்பாவியாகக் கேட்பவராக நீங்கள் இருந்தால் அந்நாட்டின் தலைமை மதகுரு சமீபத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்று படியுங்கள் கீழே...

++++++++

அதிகாரப் பகிர்வுத் திட்டம் தொடர்பான அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தொடர் மெளனம் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது எனத் தெரிவித்திருக்கும் தேசிய பிக்கு முன்னணி, நாட்டையும் தங்களை ஏமாற்ற அரசு நினைத்தால் போராட்டத்தினால் இந்த அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து விரட்டியடிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளது.

இன நெருக்கடிக்குத் தீர்வாக அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக விளக்கமளிக்கும் முகமாக கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தேசிய பிக்கு முன்னணி இந்த எச்சரிக்கையை விடுத்தது.

"அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இல்லை எனில் வரலாறு காணாத போராட்டத்தை அரசாங்கம் சந்திக்க வேண்டியிருக்கும்" எனவும் தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தமர அமில தேரர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

"அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்தி தமிழீழத்தைக் கொடுப்பதாயின் எதற்காக விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும்? எதற்காக இந்தளவுக்கு இராணுவத்தினரைப் பலிகொடுக்க வேண்டும்? பிரபாகரனிடமே தமிழீழத்தை கையளித்திருக்கலாமே?

அரச தலைவரை மாமன்னர் என அழைப்பது தொடர்பாகவும் 30 வருடங்களுக்கு அவரிடம் ஆட்சியை ஒப்படைப்பது தொடர்பாகவும் பல்வேறு தரப்புக்களிடம் இருந்தும் கருத்துக்கள் வெளியாகி வண்ணம் உள்ளது. ஆனால் அரச தலைவரோ வாயையே திறக்காமல் அரசுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளைப் பயன்படுத்தி கோமாளித்தனமான நாடகங்களை அரங்கேற்றி வருகின்றார்.

நாட்டைப் பிரிக்கும் திட்டம் 1987 ஆம் ஆண்டில் இருந்தே அரங்கேற்றப்பட்டு வருகின்றது. இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் மூலமாக திணிக்கப்பட்டதுதான் 13 ஆவது திருத்தம். அன்று வித்திட்ட விதையே இன்று பயங்கரவாதப் பயிராக வளர்ந்திருக்கின்றது.

தனி ஈழத்துக்கான விடுதலைப் போராட்டமும் இந்தியா மற்றும் அனைத்துக் கட்சிக் குழுவின் அதிகாரப் பரவலாக்கல் திட்டமும் ஒன்றேயாகும். இந்தியா அறிவிக்கும் அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் மெளனமாக இருந்துகொண்டே நடைமுறைப்படுத்தக்கூடிய ஆபத்தும் உள்ளது. இல்லை எனில் இந்தியாவுக்கு ஏற்றவாறு புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் வாய்ப்பும் உள்ளது.

இந்த விடயத்தில் அரச தலைவரின் தொடர் மெளனம் பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. தமிழர்களின் உண்மையான பிரச்சினையை அரச தலைவர் அடையாளம் கண்டுள்ளாரா? அப்படியானால் அதற்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் தனது தொடர் மெளனத்தைக் கலைத்துவிட்டு அரச தலைவர் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். 2005 ஆம் ஆண்டில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அவர் மறந்துவிட முடியாது.

நாட்டையும் மக்களையும் ஏமாற்றுவதற்கு அரசாங்கம் முற்பட்டால் தேசிய பிக்கு முன்னணி மேற்கொள்ளப் போகும் போராட்டத்தினால் ஆட்சியை விட்டுவிட்டு ஓட வேண்டிய நிர்ப்பந்தம்தான் இந்த அரசாங்கத்துக்கு ஏற்படும்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

+++ இப்போ தலைப்பை மறுபடியும் வாசியுங்கள்.. நன்றாக புரியும்! புத்தம் கஷ்டம் கச்சாமி!

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails