Saturday, September 13, 2008

சிமி மீதான தடை நீடிப்பு

 
சிமி மீதான தடை நீடிப்பு
 
lankasri.comசிமி எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பின் மீதான தடையை உச்சநீதிமன்றம் நேற்று காலவரையறையின்றி நீட்டித்து உத்தரவிட்டது.சிமி அமைப்பின் மீதான தடையை சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் அண்மையில் ரத்து செய்து உத்தரவிட்டது. 

இதனை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவின் மீதான விசாரணையை நேற்று ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், சிமி அமைப்பின் மீதான தடையை காலவரையறை யின்றி நீட்டித்து உத்தரவிட்டது. 

தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடைக்கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், "பயங்காரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் சிமி அமைப்பு தொடர்ந்து தடை செய்யபடாவிட்டால் அதன் உறுப்பினர்களை விடுதலை செய்ய வேண்டி இருக்கும்" என்று தெரிவித்துள்ளது.

சிமி அமைப்பின் மதவாத மற்றும் தேச விரோத நடவடிக்கைகளால் நாட்டின் அமைதி, ஒற்றுமை, மதச்சார்பற்ற தன்மைக்கு ஆபத்து ஏற்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சிமி அமைப்புக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அந்த அமைப்பின்மீதான தடையை நீட்டிக்க முடியாது என்று தீர்ப்பாயம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. 

இதனை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கில் இம்மாதம் 24ம் தேதி வரை சிமி மீதான தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த தடை உத்தரவு முடிவதற்கு இன்னும் 14 நாட்கள் இருந்த நிலையில் மத்திய அரசின் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி பி.சதாசிவம் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச், மேற்கொண்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரும் வரை சிமி மீதான தடை தொடரும் என்றும் மத்திய அரசின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை அக்டோபர் மாதம் 2வது வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் உத்தரவிட்டது.

 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails