Friday, September 26, 2008

ஒரிசாவுக்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை

தேவாலயங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் கலவரத்தைக் கட்டுப்படுத்த ஒரிசா அரசுக்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் இதுபோன்று எச்சரிக்கை விடுவது இது இரண்டாவது முறையாகும்.

"ஒரிசாவில் தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்கின்றன. இத்தகைய சம்பவங்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளை அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கையை மாநில அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்' என்று மத்திய உள்துறை செயலர் மதுகர் குப்தா, ஒரிசா தலைமைச் செயலர் ஏ.கே.திரிபாதிக்கு அனுப்பியுள்ள தகவலில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலவரங்கள் தொடர்ந்து நடைபெறுவது கவலையளிக்கிறது. சமூகவிரோத சக்திகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். கலவரத்துக்குக் காரணமானவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் விரைவில் சகஜநிலை ஏற்படுத்துவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு அனுப்பியுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தமால் மாவட்டத்தில் வியாழக்கிழமை சுமார் 100க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர் வீடுகளும், தேவாலயங்களும், வழிபாட்டுத் தலங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து மத்திய அரசு இரண்டாவது முறையாக ஒரிசா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக கடந்த 19-ம் தேதி கலவரத்தைக் கட்டுப்படுத்த ஒரிசா அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1222411689&archive=&start_from=&ucat=1&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails