Saturday, April 17, 2010

காஸ்' சிலிண்டரை எடைபோட்டு வாங்குகிறீர்களா?

 
 


- கே.ராம்குமார்
''காஸ் சிலிண்டரை எடை போட்டு காண்பித்து, டெலிவரி செய்ய வேண்டியது காஸ் ஏஜென்சியின் கடமை. அதை எடை போட்டு வாங்குவது நமது உரிமை' என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த தயானந்தன்.
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் இவர்.
'சிலிண்டரை எடை போட்டுக் கொடுத் தால்தான் வாங்குவேன்; இல்லாவிட்டால், அதிகாரிகளிடம் புகார் செய்வேன் என்று சொல்லிப் பாருங்கள். சில மணி நேரத்திலேயே எடை போடும் கருவியோடு டெலிவரி செய்வர்' என்கிறார்.
இவர் ஏற்படுத்திய விழிப்புணர்வால், இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பெரும்பாலோர், எடை போட்ட பிறகே சிலிண்டரை பெறுகின்றனர். பில் தொகைக்கு மேல் ஒரு ரூபாய்கூட கூடுதலாக கொடுப்பதும் இல்லை.
'பொதுவாக சிலிண்டர் எடை 15 கிலோ முதல் 16 கிலோ வரை இருக்கும். ஒவ்வொரு சிலிண்டருக்கும் எடை மாறுபடும். அதன் அளவு கைப்பிடி வளையத்தை தாங்கும் பட்டையில் தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும்.
காஸ் எடை 14.2 கிலோ இருக்கும். இது 200 கிராம் வரை எடை கூடவும் செய்யும்; குறையவும் செய்யும். சிலிண்டர் எடை, காஸ் எடை சேர்ந்து மொத்தம் 30 கிலோ இருக்கும். இதை கணக்கிட்டாலே காசின் எடை குறைவாக உள்ளதா, இல்லையா என எளிதாக கண்டறிய முடியும்' என்கிறார் தயானந்தன்.
ஏஜென்சி நிறுவனங்கள் சார்பில் பேசிய, மதுரை கூடல்நகர் விக்னேஸ்வர் ஏஜென்சி உரிமையாளர் பழனிராஜன், காஸ் பயன்படுத்தும் மகளிருக்கு தரும் டிப்ஸ்....
'சிலிண்டர் கொண்டு வந்ததும் அதில் வால்வு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பின், 'லீக்' ஆகிறதா என, ஸ்டவ்வை எரியவிட்டு பார்க்க வேண்டும். ஒருவேளை, 'லீக்' ஆனால், உடனடியாக வால்வு பகுதியை மூடிவிட்டு, திறந்தவெளியில் சிலிண்டரை வைக்க வேண்டும். இடைபட்ட நேரத்தில் எந்த சுவிட்சையும் அழுத்தக்கூடாது. ஜன்னல்களை திறந்துவிட வேண்டும்' என்கிறார். விற்கிற விலையில், காசை முறையாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல; பொருளாதார சிக்கனமும் கூட என்பதை நாம் உணர வேண்டும்.
 
***


source:dinamalar


--
www.thamilislam.blogspot.com

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails