Wednesday, April 7, 2010

ஜிம்னாஸ்டிக்கில் அசத்தும் கழைக்கூத்தாடி குழந்தைகள்

ஜிம்னாஸ்டிக்கில் அசத்தும் கழைக்கூத்தாடி குழந்தைகள் : தேசிய போட்டியில் தங்கம் வென்று சாதனை

 

Human Intrest detail news 

கோபிசெட்டிபாளையம்: கோபியை அடுத்த பி.கரட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் கழைக்கூத்தாடி குடும்ப குழந்தைகள் தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளனர்.


ஒலிம்பிக் உள்பட சர்வதேச ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் சீனா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ஜிம்னாஸ்டிக் கலையை இந்தியாவில் வளர்க்கும் பொருட்டு மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக, ஜிம்னாஸ்டிக்கை ஒத்திருக்கும் கழைக்கூத்தாடிகளின் சாகசங்களை முறைப்படுத்தி, அவர்களது குழந்தைகளுக்கு இக்கலையை பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் கோபி யூனியன் அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட கழைக் கூத்தாடிகள் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். கோவில் திருவிழா மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இவர்களது குடும்பத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் நம்பியூர் பஞ்சாயத்து யூனியன் பி.கரட்டுப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.


தமிழகத்தில் முதன்முறையாக, பி.கரட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்து லட்சம் ரூபாய் செலவில் ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கான உபகரணங்களை தமிழக அரசு அளித்துள்ளது. இதன் மூலம், இங்குள்ள தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு பயிற்சியாளர் ஜெயமோகன் ஜிம்னாஸ்டிக் பயிற்சி அளித்து வருகிறார். குறிப்பாக கழைக்கூத்தாடிகள் குடும்ப குழந்தைகள் இப்பயிற்சியில் இயற்கையாகவே பல சாகசங்களை நிகழ்த்தினர். அவர்களின் குடும்ப ஏழ்மையைக் கருதி, அதிகாலை முதல் ஜிம்னாஸ்டிக் பயிற்சி மேற்கொள்ளும் மாணவ, மாணவியர்க்கு இலவசமாக காலை உணவு வழங்கப்படுகிறது. இவர்கள் மாநில மற்றும் மாவட்ட அளவில் நடந்து வரும் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பரிசுகளை குவித்து வருகின்றனர். ஜனவரி மாதம் திருவண்ணாமலையில் நடந்த குடியரசு தினவிழா தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டியில் இப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி கற்பகம் தங்கப்பதக்கம் வென்றார்.


மார்ச் மாதம் ஆந்திரா தலைநகர் ஹைதராபாத்தில் தேசிய அளவில் நடந்த ஜிம்னாஸ்டிக் போட்டியில் கோபி பி.கரட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் விக்ரம், ஏழாம் வகுப்பு மாணவியர் கோமளப்பிரியா, சுஜி, ஆறாம் வகுப்பு மாணவன் கோடீஸ்வரன், அரசு தொடக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவன் விஜய், நான்காம் வகுப்பு மாணவியர் ஷர்மிளா, ஜோதிகா ஆகிய ஏழு மாணவ, மாணவியர் பரிசுகளை வென்றுள்ளனர். இச்சாதனையை அறிந்த தமிழக அரசு, கோபி பி.கரட்டுபாளையம் பள்ளியில் ஜிம்னாஸ்டிக் பயிற்சிக் கூடம் அமைக்க நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை உடனடியாக ஒதுக்கியுள்ளது. விரைவில் இப்பள்ளி மாணவ, மாணவியரின் ஜிம்னாஸ்டிக் திறமைகள் பெரியளவில் பளிச்சிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



source:dinamalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails