Wednesday, April 23, 2008

திடீரென மதம் பிடித்த யானை 3 பேரை அடித்துக் கொன்றது

திடீரென மதம் பிடித்த யானை 3 பேரை அடித்துக் கொன்றது

திருச்சூர், ஏப். 23: கோயில் திருவிழாவில் யானைக்கு திடீரென மதம் பிடித்ததால் பக்தர்கள் 3 பேரை அடித்துக் கொன்றது. இந்த பயங்கர சம்பவம் கேரள மாநிலம் திருச்சூர் அருகே இரிஞ்சாலகுடா என்ற இடத்தில் புதன்கிழமை நடந்தது.

அப்பகுதியில் பிரபலமான கோட்டைமணிக்கயம் என்ற கோயில் திருவிழா கடந்த 5 நாள்களாக நடைபெற்று வருகிறது. திருவிழாவில் கலந்து கொண்ட யானைக்கு புதன்கிழமை திடீரென மதம் பிடித்தது. இதனால் பக்தர் கூட்டத்துக்குள் புகுந்து ஓடியது.

யானை மதம் பிடித்து தாறுமாறாக ஓடி வருவதை கண்ட பக்தர்கள் உயிர் பயத்தில் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். பீதியில் ஓடும்போதும் சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அவ்வாறு விழுந்த ஒரு பெண்ணை யானை காலில் போட்டு மிதித்து கொன்றது.

மற்றொருவரை தனது ஒரு தந்தத்தால் குத்தி கிழித்தது. தரையில் விழுந்த மற்றொருவரையும் யானை மிதித்துக் கொன்றது.

யானைக்கு மதம் பிடித்தது ஏன் என்று விவரம் உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் பக்தர் ஒருவர் யானையின் வால் பகுதியில் உள்ள முடியை வலுக்கட்டாயமாக பிடித்ததாலேயே யானை ஆத்திரமடைந்து கூட்டத்துக்குள் புகுந்ததாக பக்தர்கள் சிலர் கூறினர்.

யானையை அடக்க மயக்கம் மருந்து செலுத்துவது என்று முடிவு செய்யப்பட்டு கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் யானைப் பாகன் மெதுவாக யானையை சமாதானப்படுத்தி சங்கிலியால் கட்டிப்போட்டுவிட்டார்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails