Monday, July 26, 2010

மதுரை குழந்தையை நரபலி கொடுத்த கொடூரன் : தூத்துக்குடியில் தலை, ஏர்வாடியில் உடல் புதைப்பு


கீழக்கரை : மதுரை தர்காவில் மாயமான குழந்தையை கொடூரமான முறையில் நரபலியிட்டு ரத்தம் குடித்த கொடூரன், குழந்தையின் தலையை தூத்துக்குடி அருகேயும், உடலை ராமநாதபுரம் ஏர்வாடியிலும் புதைத்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


மதுரை அருகே எஸ்.ஆலங்குலத்தை சேர்ந்தவர் செரின் பாத்திமா. இவரது கணவர், சமீபத்தில் விபத்தில் இறந்துவிட்டார். இவர் தனது 15 மாத குழந்தை காதர்யூசுப் உடன் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தர்காவில், கடந்த 2ம் தேதி இரவு தங்கினார். மறுநாள் காலையில் பார்த்தபோது, குழந் தையைகாணவில்லை. தல்லாகுளம் போலீசில் செரீன் பாத்திமா புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் சிதம்பரம் முருகேசன், கோரிப் பாளையம் பகுதியில் சந்தேகப் படும்படி நடமாடிய திருச்செந்தூர் காயல் பட்டினத்தை சேர்ந்த அப்துல் கபூர் (30) என்பவரை பிடித்து விசாரித்தார்.


அவர் கூறியதாவது: கனவில் வந்த காளிதேவி, தலைப் பிள்ளையை நரபலியிட்டு அதன் ரத்தத்தை குடித்து, உடலையும் தலையையும் தனிதனியாக கடற்கரை பகுதியில் புதைத்தால், யோகம் வரும் என கூறியதால், குழந்தையை கடத்தினேன். தூத்துக்குடி அருகே ஏரலில், கத்தியால் குழந்தை கழுத்தை அறுத்து கொலைசெய்து, வாளியில் ரத்தத்தை பிடித்து குடித்தேன். பின் தலையை, திருச்செந்தூர் அருகே கல்லாமொழி தர்கா அருகே கடற்கரை பகுதியில் புதைத்துவிட்டு, உடம்பை தூக்குச்சட்டியில் வைத்து, ராமநாதபுரம் ஏர்வாடி தர்கா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்து புதைத்ததாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, நேற்று அப்துல்கபூரை மதுரை தல்லாகுளம் போலீசார் ஏர்வாடி அழைத்து வந்தனர்.


கீழக்கரை டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலையில், குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். பின் திருச்செந்தூர் அருகே தலையை புதைத்த இடத்தை அடையாளம் காண்பிக்க போலீசார் அங்கு அழைத்து சென்றனர். "ஏர்வாடி காட்டுப்பள்ளி வாசல் சேர்மன் தெருவில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல், இன்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்படும்,' என, போலீசார் தெரிவித்தனர்.


source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails