Thursday, June 10, 2010

பள்ளிக்கூடம் போகாத சிறுவன்: ஐ.ஐ.டி., நுழைவுத்தேர்வில் சாதனை



புதுடில்லி : பள்ளிக்கூடத்திற்கே போகாத 14 வயது சிறுவன், ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில், இந்திய அளவில் 33வது இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளான்.ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லையென்றாலும், பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். ஆனால், பள்ளிக்கூடத்திற்கே போகாமல், வீட்டிலிருந்தபடியே 10ம் வகுப்பு வரை படித்த, ஷால் கவுசிக் என்ற 14 வயது சிறுவன், ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் இந்திய அளவில் 33வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளான்.


ஷாலிடம் உள்ள அபூர்வ திறமையை கண்டு, அவன் தாய் ருச்சி கவுசிக், டாக்டர் தொழிலை விட்டுவிட்டு, பல்வேறு விதங்களில் அவனை ஊக்கப்படுத்தியுள்ளார். ஷாலின் தந்தை ராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 2006ம் ஆண்டு பள்ளியில் சேர்ந்த ஷால், 2008 ம் ஆண்டில், 10ம் வகுப்பை முடித்து விட்டான்.தனது லட்சியம் குறித்து ஷால் கூறுகையில், "எனக்கு இன்ஜினியராவதில் விருப்பமில்லை. இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீனை போன்று, இயற்பியல் மேதையாக வேண்டும்' என்று தெரிவித்துள்ளான்.


இதுதொடர்பாக, ருச்சி கவுசிக் கூறியதாவது:ஷாலிடம், எதையும் உடனடியாக புரிந்து கொள்ளும் அபூர்வ திறமை இருப்பதை, அவன் குழந்தையாக இருந்தபோதே கண்டுபிடித்தேன். பள்ளிக்கூடத்தில் கற்றுத் தரப்படும் பாடங்கள், அவன் அறிவு பசிக்கு சோளப்பொறி என்பதை உணர்ந்தேன்.எனவே, அவனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு, 12 ஆண்டுகளாக, அவனுக்கு நானே வீட்டில் பாடங்களை சொல்லிக் கொடுத்தேன். இதற்காக, எனது டாக்டர் தொழிலை விட்டுவிட்டேன். இதற்காக, சமூகத்தில் நான் மிகப்பெரிய சிக்கல்களையும் சந்தித்திருக்கிறேன். அதையெல்லாம் மறக்கும் விதத்தில், நல்ல பலன் கிடைத்திருப்பது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.ஷால் எப்போதும், ஒரே விதமான பாடத்தை படிக்க மாட்டான். சில நேரங்களில் புவியியல் தொடர்பாக படிப்பான்; சில நேரங்களில் வரலாறு. போரடித்தால் நாவல்களை தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பான். சார்லஸ் டிக்கின்ஸ் நாவல்களை விரும்பி படிப்பான். அவன் படிப்பதற்காக 15 லட்ச ரூபாய் செலவில், வீட்டில் நூலகம் ஒன்றை அமைத்து கொடுத்திருக்கிறேன். இந்த நூலகத்தில் 2,000 புத்தகங்கள் இருக்கின்றன. அவை அனைத்தையும், ஷால் படித்து முடித்துவிட்டான். இந்திய புராணக் கதைகளை படிப்பதில் அவனுக்கு நிறைய ஆர்வம். அதேபோன்று, எகிப்தியர்களின் வரலாறுகளையும் விரும்பி படிப்பான்.இவ்வாறு ருச்சி தெரிவித்தார்.


ஷாலின் தங்கை சரசுக்கு ஒருவிதமான மறதி நோய் உள்ளது. எனினும், அவளுக்கும், ஷாலை போலவே வீட்டிலேயே ருச்சி பாடம் சொல்லித் தருகிறார்.


ஷாலுக்கு ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள் கூறியதாவது:ஷால் அதிபயங்கர புத்திசாலி. மிகப்பெரிய சிக்கலான கணக்குகளைக் கூட, பேப்பர் பேனா உதவியின்றி, மனக்கணக்கு போட்டு, சில வினாடிகளில் பதில் சொல்லிவிடுவான். எங்களிடமிருந்து அவன் கற்றுக் கொண்டதை விட, நாங்கள் தான் அவனிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டோம்.இவ்வாறு கூறி அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.


 


source:dinamalar


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails