Monday, January 12, 2009

மறைவுக்குப் பின்னரும் புகழ்!

மறைவுக்குப் பின்னரும் புகழ்!

"சுவாமி பிறரை அழிக்கும் எண்ணத்தை வளர்த்துக் கொண்டால், நாமே அழிவோம் என்றீர்களே, அதில் ஒரு சந்தேகம்!" சொன்ன சீடனை, "என்ன?" என்பது போல் நோக்கினார் குரு.

"தேய்வதும் அழிவதும் எல்லோருக்கும் உண்டுதானே. பிறருக்குத் தீங்கு நினைத்தாலும் நினைக்கா விட்டாலும் அது உறுதிதானே...பிறகு ஏன் பகை கூடாது?"

குரு மவுனமாகச் சென்று, ஒரு சந்தனக் கட்டையையும் சிறு ரப்பர் துண்டையும் எடுத்து வந்தார். இரண்டையும் சீடனிடம் தந்து கல்லில் உரசித் தேய்க்கச் சொன்னார்.

அப்படியே சீடனும் செய்தான்.

சிறிது நேரத்துக்குப் பின்பு சீடனிடம் குரு கேட்டார்.

"இப்போது உன் கையில் என்ன இருக்கிறது?"

"இரண்டுமே தேய்ந்து கரைந்து விட்டன குருவே"

"நன்றாகப் பார்... ரப்பர் மட்டும்தான் அழிந்து விட்டது. சந்தனக்கட்டை கரைந்தாலும் அதன் மணம் இன்னும் வீசுகிறது. அரைத்த சந்தனமாகவும் அது பயன்படும். இப்படித்தான் , எல்லோருக்கும் இறுதி உறுதி என்றாலும் பிறருக்குத் தீங்கு செய்யாமலிருப்பவர். அவரது மறைவுக்குப் பின்னரும் புகழ் மணக்க இருப்பார்." என்றார் அந்தக் குரு.

 
 
நன்றி:முத்துக்கமலம் இணைய இதழ்

No comments:

Post a Comment