Tuesday, December 23, 2008

என்பது ஒரு நகரத்தை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல: தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்

 

 

ஒரு தேசத்தின் விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நகரத்தை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக ஊடக நிறுவனமான ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்:

ஒரு விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நகரத்தை மட்டுமே மையமாகக் கொண்டது அல்ல.

நிலப் பகுதிகளை இழப்பதும் மீளக் கைப்பற்றுவதும் பொதுவானதுதான். எமது விடுதலைப் போராட்ட இலட்சியத்தை வென்றெடுக்கும் வரையில் தொடர்ந்து போர் நகரங்கள் உருவாக்கப்படும்.

அமைதிப் பேச்சுக்களுக்கு முன்னர் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற மகிந்த ராஜபக்சவின் நிபந்தனையை நிராகரிக்கிறோம்.

தற்போதைய சூழ்நிலையில் அதாவது ஆயுதங்களை விடுதலைப் புலிகள் கைவிட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்று கோரிவரும் நிலையில் பேச்சுவார்த்தைகள் என்பது சாத்தியம் அல்ல.

போரில் எமக்கு இழப்புக்கள் ஏற்பட்ட போதும் சிறிலங்காவின் 32 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை சீர்குலைப்பதே எமது இலக்காகும்.

எமது தற்காப்பு தாக்குதல் நடவடிக்கையின் ஒருபகுதி- சிறிலங்காவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கப்படுவதும் ஆகும். சிறிலங்காவின் பொருளாதாரம் சீர்குலைக்கப்படும் போதுதான் தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்காவின் இனப்படுகொலையும் பலவீனப்படுத்தப்படும்.

கிளிநொச்சி போர்க்களத்தில் சிறிலங்கா படையினருக்கு நாங்கள் பாடம் கற்பிப்போம். எமது வலிந்த தாக்குதல் நடவடிக்கையை தொடங்குவதற்கு உரிய காலம் இடத்துக்காக காத்திருக்கிறோம்.

2008 ஆம் ஆண்டில் 2,250 போராளிகளை நாங்கள் இழந்திருக்கின்றோம்.

ஆயுதங்களை பெற்றுக்கொள்வதில் எமக்கு எதுவித சிக்கலும் இல்லை. நாங்கள் இழந்த பகுதியை மீண்டும் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றார் பா. நடேசன்.
 
 

No comments:

Post a Comment